இருளர் பெண்கள் பாலியல் பலாத்காரம் விவகாரத்தை சிபிஐ விசாரிக்க பாலபாரதி கோரிக்கை
சென்னை: விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் இருளர் இனப்பெண்கள் காவல் துறையினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும் என்று சட்டசபையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கே. பாலபாரதி வலியுறுத்தினார்.
சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கே.பாலபாரதி பேசியதாவது,
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் இருளர் இனப்பெண்கள் 4 பேர் காவல் துறையினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தலா ரூ. 5 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.
ஆனால் இப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவி்த்தார். அப்படியென்றால் முதல்வர் எப்படி அந்த பெண்களுக்கு நிவாரணத்தை வழங்கியிருக்க முடியும். எல்லாமே முரண்பாடாகவே உள்ளது. எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிப்பதற்கு பதிலாக சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்.
மேலும், முதல்வர் அறிவித்த ரூ.5 லட்சம் நிவாரணத்தையும் அந்த பெண்கள் பெற முடியாத நிலையில் உள்ளனர். வங்கிக் கணக்கு துவங்க அவர்களிடம் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற எந்த அடையாள அட்டையும் இல்லை. எனவே, அவர்கள் அந்த நிவாரணத்தை பெற அரசு உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றார்.