ஒரு ஆம்லெட்டுக்காக புரோட்டாக் கடையை சூறையாடிய 3 ஏட்டையாக்கள் டிரான்ஸ்பர்!
கோவில்பட்டி: கோவில்பட்டியில் பரோட்டா கடையில் ஆம்லெட்டுக்காக ஏற்பட்ட தகராறில் 3 ஏட்டுகள் அதிரடியாக மாற்றப்பட்டனர்.
கோவில்பட்டியில் கடந்த 29ம் தேதி செண்பகவல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்ததையொட்டி நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஒரு சில பரோட்டா கடைகள், டீக்கடைகள் மட்டுமே திறந்திருந்தன.
இந்நிலையில் அன்றிரவு பழைய பேருந்து நிலையம் பகுதியில் ரவி என்பவரின் பரோட்டா கடைக்கு எஸ்பி சிஐடி தனிப்பிரிவு ஏட்டு முத்துராஜ் என்பவர் வந்து தனக்கு ஆம்லெட் போட்டு தரும்படி கேட்டுள்ளார். அதற்கு கடைக்காரர் ரவி கூட்டமாக இருக்கிறது, கொஞ்சம் பொறுங்கள் என்று கூறினாராம்.
இது ஏட்டுக்கு கோபத்தை ஏற்படுத்தவே அவர் பழைய பேருந்து நிலையம் சென்று அங்கு பணியில் இருந்த புறக்காவல் நிலைய போலீசாரிடம் நடந்ததை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அங்கிருந்த 2 ஏட்டுகள் ரவி கடைக்கு சென்று போக்குவரத்துக்கு இடையூறாக கடைக்கு வெளியே இப்படியா சேர், டேபிள்களை போடுவது, அதை அகற்றுங்கள் என்று அவர்கள் பங்குக்கு மிரட்டியுள்ளனர்.
இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கடையில் இருந்த இட்லி மாவு மற்றும் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. போலீசாரின் இந்த நடவடிக்கை குறித்து கொதித்தெழுந்த வியாபாரிகள் சங்கத்தினர் நேற்று முன்தினம் நெல்லை சரக டிஐஜி வரதராஜுவை சந்தித்து மனு அளித்தனர்.
அவர் விசாரணை நடத்தி தனிப்பிரிவு ஏட்டு முத்துராஜ், மேற்கு காவல் நிலைய ஏட்டுகள் கணேசமுருகன், துரைப்பாண்டி ஆகிய மூவரையும் தூத்துக்குடி ஆயுதப்படைக்கு மாற்ற உத்தரவிட்டார்.