120 குழந்தைகள் இறந்தது வதந்தியாம்: சொல்கிறார் மமதா 'தீதி'!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்திருக்கும் நேரத்தில் அரசு மருத்துவமனைகளில் ஏராளமான குழந்தைகள் இறந்துள்ளதாகக் கூறப்படுவதெல்லாம் வெறும் வதந்தி என்று அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வராக மமதா பானர்ஜி பதவியேற்ற பிறகு அம்மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இதுவரை 120 பச்சிளம் குழந்தைகள் இறந்துள்ளன. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்திருக்கும் நேரத்தில் அரசு மருத்துவமனைகளில் ஏராளமான குழந்தைகள் இறந்துள்ளதாகக் கூறப்படுவதெல்லாம் வெறும் வதந்தி என்று மமதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
அரசு மருத்துவமனைகளில் முறையான சிகிச்சை அளிக்கப்படாததால் ஏராளமான குழந்தைகள் இறக்கின்றன என்பது உண்மையில்லை. அது வெறும் வதந்தி தான். ஊடங்கள் சின்ன விஷயத்தை ஊதி, ஊதி பெரிதாக்கிவிட்டன. எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு மாநிலத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் 3 சதவீதம் குறைந்துள்ளது. இனி வரும் காலத்தில் குழந்தைகள் இறப்பு விகிதத்தை 25 சதவீதம் குறைக்க எங்கள் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியளிக்கிறேன்.
மாநிலத்தில் உள்ள ஏராளமான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைவு உள்ளது. இறந்ததில் பெரும்பாலான குழந்தைகள் எடை குறைவாகவும், ஊட்டச்சத்தில்லாமலும் இருந்தன என்று கேள்விப்பட்டேன்.
ஏராளமான குழந்தைகள் வீட்டில் பிறக்கின்றன. அந்த குழந்தைகளை மருத்துவமனைக்கே கொண்டு வருவதில்லை. அப்படியே கொண்டு வரும்போது அவை உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளன. சிகிச்சை அளித்தும் பயனில்லாத நிலையில் கொண்டு வரப்படுகின்றன. அந்த குழந்தைகள் ஒன்றும் சிகிச்சையால் இறந்துவிடவில்லை.
நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அரசு மருத்துவமனைகளில் புதிதாக 6 குழந்தைகள் பிரிவு துவங்கியுள்ளோம். இந்த ஆண்டில் இன்னும் 40 குழந்தைகள் பிரிவு துவங்கவிருக்கிறோம் என்றார்.