2ஜி உரிமம் ரத்து எதிரொலி: டெலிநார் வெளியேற முடிவு?
டெல்லி : 2 ஜி அலைக்கற்றை உரிமங்களை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளதை அடுத்து இந்தியாவில் இருந்து வெளியேற, டெலிநார் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2ஜி அலைக்கற்றைக்கான உரிமங்கள் சட்டத்துக்கு முரணான முறையில் வழங்கப்பட்டுள்ளன என்று கூறி 2008 ஆம் வழங்கப்பட்ட 122 உரிமங்களை உச்சநீதிமன்றம் இரு தினங்களுக்கு முன் ரத்து செய்தது. மேலும், 2ஜி அலைக்கற்றை ஓதுக்கீட்டில் பயனடைந்து, அதன் பிறகு விதிகளை மீறி பங்குகளை விற்ற தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதன்படிவீடியோகான், ஸ்வான், அலையன்ஸ் இன்ஃபராடெக் நிறுவனங்களுக்கு தலா ரூ. 4 கோடியும், எடிசலாட், டாடா டெலிகாம், யூனிநார் ஆகிய நிறுவனங்களுக்கு தலா ரூ. 5 கோடியும், லூப், எஸ்ஸார், எஸ்-டெல், சிஸ்டெமா ஷாம் நிறுவனங்களுக்கு தலா ரூ. 50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வெளியேறுகிறது டெலிநார்
இதனிடையே உச்சநீதிமன்றத் தீர்ப்பால், யுனிநாரின் 22 உரிமங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நார்வேயைச் சேர்ந்த டெலிநார் நிறுவனம் இந்தியாவின் யுனிடெக் நிறுவனத்துடன் இணைந்து யுனிநார் செல்போன் சேவையை வழங்கி வருகிறது. இதனால் இந்தியாவில் செய்துள்ள முதலீட்டைப் பாதுகாப்பதில் தீவிரமாக இறங்கியுள்ள டெலிநார் நிறுவனம், நாட்டை விட்டு வெளியேறுவது பற்றிப் பரிசீலித்து வருவதாகக் கூறியுள்ளது.
மத்திய அரசின் புதிய சந்தை ஒழுங்குமுறை அறிவிப்பு வரும் வரை தங்களால் காத்திருக்க முடியாது என்றும் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில், யுனிடெக் நிறுவனத்துடனான ஒப்பந்தங்கள் சட்டரீதியானவை என்பதை சுட்டிக் காட்டியுள்ள அந்நிறுவனம், இந்தப் பிரச்னையில், மத்திய அரசு நல்ல முறையில் தீர்வு காணும் என நம்புவதாக தெரிவித்துள்ளது. இத்தகவலை அந்த நிறுவனத்தின் செயல் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இதேபோன்று, உச்சநீதிமன்ற தீர்ப்பால் எம்.டி.எஸ் நிறுவனத்தில் பங்குகளை வைத்துள்ள ரஷ்யாவின் சிஸ்டமா நிறுவனம், சட்ட ரீதியாய்ப் போராடப் போவதாக அறிவித்திருக்கிறது.