விதிமீறிய கட்டடங்கள்: 3 ஆண்டு சிறை ரூ. 10 லட்சம் அபராதம் - தமிழக அரசு முடிவு
சென்னை: விதிமீறிய கட்டடங்கள் தொடர்பான நீதிபதி மோகன் கமிட்டியின் பரிந்துரைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை தியாகராய நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு அக்டோபர் 31 ம் நாள் சீல் வைக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தமிழக அரசின் நகர்புற வளர்ச்சித்துறை செயலாளர் மணீந்தர் ரெட்டி பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கட்டட விதிமீறல் தொடர்பாக நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி மோகன் கமிட்டியின் அறிக்கையை அரசு பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோகன் கமிட்டியின் பரிந்துரைப்படி, விதிகளை மீறும் கட்டட உரிமையாளர்களுக்கு 3 மாதம் முதல் 3 ஆண்டுவரை சிறைத் தண்டனையும் 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு கூறியுள்ளது. மேலும் கட்டட ஒப்பந்ததாரர், கட்டுமான நிறுவனம் மற்றும் சர்வேயர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் 2007ஆம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடங்களுக்கு விதிவிலக்கு அளிக்கலாம் என நிதிபதி மோகன் குழு பரிந்துரைத்திருப்பதாகவும் அரசின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தியாகராய நகரில் சீல் வைக்கப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கு வரும் 7ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications