புதுச்சேரியில் மவுன சாமியார் ஆட்சி நடக்கிறது: வைத்திலிங்கம் குற்றச்சாட்டு
புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. இங்கு மவுன சாமியார் ஆட்சி நடக்கின்றது என்று அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் சட்டம்-ஒழுங்கை சீர்செய்ய முதல்வர் ரங்கசாமி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் வைத்திலிங்கம் தலைமையிலான காங்கிரஸ் நிர்வாகிகள் துணை நிலை ஆளுநரின் செயலாளர் உதிப்திரேவிடம் மனு அளித்தனர்.
பின்னர் வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
புதுச்சேரியில் வியாபாரிகள் மீது ரவுடிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது குறித்து அரசிடம் பல முறை புகார் தெரிவித்தும் உரிய நவடிக்கை எடுக்கப்படவில்லை. குறிப்பாக நூறடி ரோட்டில் வியாபாரி மீது தாக்குதல், ஏனாமில் கொலை ஆகியவை நடந்துள்ளது.
புதுச்சேரியில் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது. மாநில அரசு அனைத்து சம்பவங்களைப் பார்த்து வாய்மூடி மவுனமாக உள்ளது. இங்கு சட்டம்-ஒழுங்கு கவலையளிக்கும் வகையில் இருப்பதற்கு முதல்வர் ரங்கசாமி அரசு தான் காரணம். புதுச்சேரியில் மவுன சாமியார் ஆட்சி நடக்கின்றது.
சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு வருவதைத் தடுக்கும் நடவடிக்கையில் முதல்வர் ஈடுபட்டதற்கான எந்தவித அறிகுறியும் தெரியவில்லை.
போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் சட்டம்-ஒழுங்கு கெட்டுள்ளது. எனவே, உடனே போலீசாரின் ஆலோசனை கூட்டத்தை நடத்த ஆளுநர் ஏற்பாடு செய்ய வேண்டும் என மனு கொடுத்துள்ளோம். இந்தப் புகார் மனுவின் நகல் பிரதமருக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றார்.