கூடங்குளம் காவல்துறையினர் அதிரடி மாற்றம்-போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை?
திருநெல்வேலி: கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சுமூகமான சூழலை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து முத்துநாயகம் தலைமையில் மத்திய அரசு ஒரு குழுவை அமைத்தது.
இதேபோல் தமிழ்நாடு அரசும் கூடங்குளம் எதிர்ப்புக் குழுவினரை உள்ளடக்கிய ஒரு வல்லுநர் குழுவை அமைத்தது.
இருதரப்புக்கும் இடையே மூன்று சுற்றுப் பேச்சுக்கள் நடைபெற்றன. 4-வது சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு சென்ற கூடங்குளம் எதிர்ப்புக் குழுவினரை இந்து முன்னணியினர் தாக்கியதால் பேச்சுவார்த்தை முறிந்தது.
இனி மத்திய குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்று கூடங்குளம் போராட்டக் குழுவினர் அறிவித்தனர்.
இந்நிலையில் தமிழக அரசு, கூடங்குளம் தொடர்பாக ஆராய ஒரு புதிய வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று அறிவித்தது.
இது போராட்டக்காரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் போராட்டக் குழுவுடன் பேச்சு நடத்தி ஒரு சுமூக சூழலை உருவாக்க காவல்துறையிலும் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கூடங்குளம் போலீசார் போராட்டக் குழுவினர் மீது இதுவரை 156 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இவை திரும்பப் பெற முடியாத வழக்குகளாகும்.
இந்நிலையில்; கூடங்குளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் துணை கண்காணிப்பாளருக்கு பதிலாக, அருகிலுள்ள கிராமங்களை சொந்த ஊராகக் கொண்ட அதிகாரிகள், புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கூடங்குளம் இன்ஸ்பெக்டர் சங்கமேஸ்வரனுக்கு பதிலாக, கூடங்குளம் அருகிலுள்ள பழவூர், யாக்குவாபுரத்தைச் சேர்ந்த, இன்ஸ்பெக்டர் ராஜ்பாலும்; வள்ளியூர் கூடுதல் எஸ்.பி., விஜயகுமாருக்கு பதிலாக, கூட்டப்புளி அருகிலுள்ள கண்ணன்குளத்தைச் சேர்ந்த, வள்ளியூர் துணை கோட்ட போலீஸ் துணை கண்காணிப்பாளராக, ஸ்டான்லி ஜோன்ஸ் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அணு உலை எதிர்ப்பு போராட்டம் மற்றும் அதில் ஈடுபடுவோருக்கு எந்த சிக்கலும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, தமிழக அரசு உத்தரவின் பேரில், காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
புதிய அதிகாரிகளின் சொந்த ஊரைச் சேர்ந்த பலர் போராட்டத்தில் ஈடுபடுவதால், அவர்களிடமும், உள்ளூர் பாதிரியார்களிடமும் பேச்சு நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தமிழக அரசு இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.