அமைச்சர் நாரயணசாமி மன்னிப்பு கேட்கவேண்டும்: உதயகுமார் வக்கீல் நோட்டீஸ்
நெல்லை: நற் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய மத்திய அமைச்சர் நாரயணசாமி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டக்குழு தலைவர் உதயகுமார், வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி கடந்த 6 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இடிந்தகரையில் உண்ணாவிரதம், சாலை மறியல், மொட்டை அடிக்கும் போராட்டம் என பல கட்டங்களாக போராட்டம் நடை பெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, அணு உலை எதிர்ப்பு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நடத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு வெளிநாட்டு நிதியாக ரூ.1 1/2 கோடி வந்துள்ளது என்பதற்கான ஆதாரம் உள்ளது என்று கூறினார்.
இதனையடுத்து மத்திய அமைச்சர் நாராயணசாமிக்கு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் சார்பில் அவரது வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது,
மன்னிப்பு கோரவேண்டும்
எனது கட்சிக்காரர் நடத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு வெளிநாட்டில் இருந்து ரூ.1 1/2 கோடி பணம் வந்துள்ளது என்று கூறி அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளீர்கள்.
அதோடு மட்டுமல்லாமல் பொதுநலனுக்கு எதிராகவும் செயல்பட்டுள்ளீர்கள். எனவே, இந்த நோட்டீஸ் கிடைத்த 3 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் மீது சிவில் மற்றும் குற்ற வழக்கு தொடரப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.