குஜராத் கலவரம்: சிறப்பு விசாரணைக் குழு அறிக்கை தாக்கல்-நரேந்திர மோடி விடுவிப்பு?
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் 58 கரசேவகர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பயங்கர மதக் கலவரம் மூண்டது. வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. பல வழிபாட்டு தலங்களும் எரிக்கப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கானோர் சிறுபான்மையினர் உள்பட ஏராளமானோர் பலியாயினர்.
குல்பர்க் பகுதியில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஈசன் ஜாப்ரி உள்பட 69 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்பட 62 பேர் மீது புகார் கூறப்பட்டது. இந்த வழக்கை மாநில போலீசார் விசாரணை நடத்தினால் நியாயம் கிடைக்காது என உச்ச நீதிமன்றத்தில் ஈஷன் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி வழக்கு தொடர்ந்தார்.
இதைத் தொடர்ந்து சிபிஐ முன்னாள் இயக்குனர் ராகவன் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை கடந்த 2009ம் ஆண்டு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
சிறப்பு புலனாய்வுக் குழு தனது விசாரணை அறிக்கையை நேற்று நீதிபதி முன்பு தாக்கல் செய்தது.
இந்த அறிக்கையில், கலவரத்தைத் தடுக்க முதல்வர் மந்திரி நரேந்திர மோடி போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை என்று கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேலும் மோடிக்கு எதிரான ந்த வழக்கை முடித்துக் கொள்ளவும் சிறப்புப் புலனாய்வுக் குழு பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிகிறது.
அறிக்கை நகல்களைக் கேட்டு வழக்கு
இதற்கிடையே, கலவரத்தில் மோடிக்கு தொடர்பில்லை என்று கூறும் அறிக்கையின் முழு நகல்களை அளிக்குமாறு தீஸ்டா செடால்வட் மற்றும் முகுல் சின்ஹா தொடர்ந்த புதிய வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது அகமதாபாத் மாஜிஸ்திரேட் நீதிமன்றம்.
மேலும் இந்த வழக்கை வரும் 13-ம் தேதிக்கு ஒத்தி வைத்து மாஜிஸ்திரேட் எம் எஸ் பட் உத்தரவிட்டார்.