சங்கரன்கோவிலிலில் போட்டியிட்டு டைமை வீணடிக்க விரும்பவில்லையாம் தா.பாண்டியன்!!
கடந்த திமுக ஆட்சிக்காலத்தின்போது நடந்த ஒரு இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிக்க முடிவு செய்தபோது, அதைக் கடுமையாக கண்டித்த இடதுசாரி கட்சிகள், தோல்வியோ, வெற்றியோ போட்டியடுவது ஜனநாயகக் கடமை என்று கூறி தனித்து நின்ற நிலையில் தற்போது ஜெயலலிதாவுக்கு மறைமுகமாக உதவும் வகையில் போட்டியிடுவது டைம் வேஸ்ட் என்று தா.பாண்டியன் கூறியிருப்பதாக கருதப்படுகிறது.
மதுரை வந்த தா.பாண்டியன் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுவில் சந்தித்துக் கொள்வதை வைத்து கூட்டணிக்கு பேசுகிறார்கள் என்றோ, கூட்டணி வைப்பார்கள் என்றோ கூற முடியாது. தனிப்பட்ட வகையில் நட்பு ரீதியில் சந்தித்துக் கொள்ளலாம்.
சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு எங்கள் நேரத்தை வீணடிக்க மாட்டோம். நாங்கள் போட்டியிடப் போவதுமில்லை, யாருக்கும் ஆதரவும் தரப் போவதுமில்லை. இதுவரை யாரும் எங்களிடம் ஆதரவும் கேட்கவில்லை.
கூடங்குளம் விவகாரத்தைப் பொறுத்த வரை உடனே மத்திய மாநில அரசுகள் கூடி, திட்டம் இயங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மின்சார தட்டுப்பாட்டுச் சிக்கலைத் தீர்க்க உடனடியாக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் திட்டம் செயல்படுத்தப் பட வேண்டும். அதற்கு தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்.
தமிழகத்தில் நிலவும் நதிநீர் பிரச்னையைத் தீர்க்க முயலவேண்டும். தற்போது, நதிகள் இணைப்பு திட்டம் குறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, தென்னக நதிகளை இணைக்கும் திட்டம் குறித்து தமிழக அரசு சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானத்தை வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் கொண்டு வரவேண்டும்.
அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த போது நதிகள் இணைப்புத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டது. எனவே இதை உடனடியாக அரசு முன்வைக்க வேண்டும்.
தமிழகத்தில் சாலை விபத்துகள் அதிகரித்துள்ளன. சாலை விபத்துகளைத் தடுக்க போதிய கவனம் செலுத்த வேண்டும். சாலை விபத்துகள் குறித்து விசாரித்து உடனடியாக வழக்கை முடிக்க நீதிமன்றங்களில் போதிய நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும். இந்த விசாரணை 6 மாதங்களுக்குள் நடத்தி முடிக்கப்பட்டு வழக்கு முடிக்கப்படவேண்டும் என்றார் அவர்.