கேரளாவில் கோவில் விழாவில் யானைக்கு மதம்: வாகனங்கள் சேதம்
திருவனந்தபுரம்: கேரளாவில் கோவில் திருவிழாவின்போது யானைக்கு மதம் பிடித்தது. இதையடுத்து அது அங்கிருந்த மக்களை விரட்டி, வாகனங்கள் தூக்கி வீசி அட்டகாசம் செய்தது.
கேரள மாநிலம் கொல்லத்தை அடுத்த பன்னக்குளம் பகுதியில் காவுமுறி கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவையொட்டி சாமி ஊர்வலம் நடந்தது. இதற்காக பக்கத்தில் உள்ள மகாதேவர் கோவில் யானை நாராயணன்குட்டியை பயன்படுத்தினர். நேற்று முன்தினம் காலை யானைக்கு நெற்றி பட்டம் கட்டி அலங்கரிக்கப்பட்டு ஊர்வலம் நடந்தது. யானை மீது சாமி சிலையை ஏந்தியபடி பூசாரி ஊர்வலமாக சென்றார்.
நெல்லாறு பாலத்தின் அருகே ஊர்வலம் சென்றபோது யானைக்கு திடீரென மதம் பிடித்தது. இதனால் யானை மிரண்டு ஓடியது. அதன்மீது சாமி சிலையை பிடித்தவாறு அமர்ந்திருந்த பூசாரி மதுசர்மா கீழே விழுந்தார். உடனே உருண்டு புரண்டபடி அவர் யானையின் கால்களுக்கு கீழே குனிந்து அவர் தப்பி ஓடினார். கீழே விழுந்ததில் அவருக்கு தலையிலும், கண்ணிலும் காயம் ஏற்பட்டது. பக்தர்கள் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கிடையே யானை அந்த வழியாக வந்தவர்களை விரட்டியதால் மக்கள் அனைவரும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அப்போது யானை சாலையின் ஓரம் நிறுத்தப்பட்டிருந்த கார், வேன்களை தும்பிகையால் தூக்கி வீசி துவம்சம் செய்தது.
இது பற்றி தகவல் அறிந்த கால்நடை துறையினர் மற்றும் யானையை அடக்கும் குழுவினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். குழுவில் இருந்த டாக்டர் ஒருவர் துப்பாக்கியில் மயக்க ஊசி பொருத்தி யானையை நோக்கி சுட்டார். இதி்ல் மயக்கம் அடைந்த யானையை கால்நடை டாக்டர்கள் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.