கோத்ரா கலவர வழக்கு: மோடி அரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்
கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தின்போது ராகியல் பகுதியில் உள்ள 56 கடைகள் எரிக்கப்பட்டன. கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு கடந்த 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கூடுதல் நிவாரண உதவி அறிவித்தது. இதையடுத்து கடை உரிமையாளர்கள் நிவாரணம் கோரி விண்ணப்பித்தனர்.
ஆனால் அகமதாபாத் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அவர்களுக்கு எந்திவித பதிலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கடை உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது.
இந்நிலையில் நிவாரணம் கோரிய அந்த 56 பேரின் விண்ணப்பங்களும் 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே நிராகரிக்கப்பட்டதாக கலெக்டர் அலுவலகத்தில் இருந்து இந்த மாத துவக்கத்தில் தகவல் வந்துள்ளது.
நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் தங்கள் விண்ணப்பங்களை பரிசீலிக்காத கலெக்டர் மற்றும் மாநில அரசு மீது கடை உரிமையாளர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மாவட்ட கலெக்டர் மற்றும் மோடி அரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.