சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: மதிமுக வேட்பாளர் யார்? 20ம் தேதி வைகோ அறிவிப்பு
கடந்த சட்டமன்ற தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதியில் அதி்முக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருப்பசாமி மரணமடைந்ததைத் தொடர்ந்து அத்தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருந்த போதிலும் தேர்தல் பணிகளை கட்சிகள் தொடங்கி விட்டன.
முதன் முதலாக முதல்வர் ஜெயலலிதா தனது கட்சி வேட்பாளரை அறிவித்தார். சங்கரன்கோவில் நகரசபை தலைவியாக உள்ள முத்துசெல்வியே அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவர் கடந்த 7ம் தேதி சங்கரன்கோவில் தொகுதியில் தனது பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். அதிமுகவை தவிர சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள திமுக, மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்காவிட்டாலும் அக்கட்சியினர் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர். ஆனால் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கூறுவதாக தெரிவித்துள்ள காங்கிரஸ் மற்றும் தேமுதிக கட்சியினர் தேர்தல் பணிகள் எதிலும் ஈடுபடவில்லை.
திமுக மற்றும் மதிமுக சார்பி்ல் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதில் திமுக வேட்பாளருக்கான நேர்காணல் நாளை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சித் தலைவர் கருணாநிதி நடத்துகிறார். மேலும் மதிமுகவுக்கான நேர்காணலை வரும் 20ம் தேதி சென்னையில் அக்கட்சியின் தலைவர் வைகோ நடத்துகிறார். அதன் பிறகு மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அன்றைய தினமே அறிவிக்கிறார்.