உயர்நீதிமன்ற தாக்குதல் நாள் அனுசரிப்பு-வக்கீல்கள் கோர்ட் பணி புறக்கணிப்பு
அந்த நாள்
2009-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதியன்று சென்னை உயர்நீதிமன்றத்துக்குள் நுழைந்த காவல்துறையினர் வழக்கறிஞர்கள், நீதிபதிகள், நீதிமன்ற பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் பலரும் காயமடைந்தனர்.
இந்த நாளை ஆண்டுதோறும் கருப்பு தினமாக கடைபிடித்து நீதிமன்ற பணிப் புறக்கணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது பிப்ரவரி 19-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்றைய தினம் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக தமிழக, புதுவை நீதிமன்றங்களின் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு தலைவர் பரமசிவம் அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து இன்று தமிழ்நாடு, புதுச்சேரியில் நீதிமன்றத்தை வழக்கறிஞர்கள் புறக்கணித்துள்ளனர். இப்பணிப் புறக்கணிப்பில் மொத்தம் 60 ஆயிரம் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
அரசு மீது புகார்
இத்தனை ஆண்டுகளாகியும் நீதிமன்றத்தில் தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்பது வழக்கறிஞர்களின் குற்றச்சாட்டு.
தாக்குதல் நடத்திய காவல்துறையினரை தண்டிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.