அழகிரி, ஸ்டாலின் சகிதம் கருணாநிதி நேர்காணல்-சங்கரன்கோவில் திமுக வேட்பாளர் யார்?
சென்னை: சங்கரன்கோவில் தொகுதிக்கான இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் திமுக தனது வேட்பாளரைத் தேர்வு செய்ய இன்று நேர்காணல் நடத்தியது. இதில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த 41 பேரும் கலந்து கொண்டனர்.
எதிரும் புதிருமாக உள்ள மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்கு திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர்களிடம் இருந்து பிப்ரவரி 5 முதல் 13-ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. மொத்தம் 41 மனுக்கள் வந்திருந்தன.
வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் தொடங்கியது.
பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் துணைப் பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், எஸ்.பி.சற்குணபாண்டியன், வி.பி.துரைசாமி, தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி ஆகியோரும் வேட்பாளர்களை நேர்காணலில் கலந்து கொண்டனர்.
முதலில் நேர்காணலில் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பாரா என்பது சந்தேகமாக இருந்தது. கடந்த 4ம் தேதி நடந்த தேர்தல் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்கவில்லை. இருப்பினும் இந்றைய நேர்காணலில் அவர் கலந்து கொண்டார்.