19ம் தேதி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னையில் மட்டும் 1126 மையங்களில் இந்த போலியோ சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடந்த 16 வருடங்களாக அகில இந்திய அளவில் கூடுதல் போலியோ சொட்டுமருந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் 2 தவணைகளில் போலியோ சொட்டுமருந்து முகாம்கள் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல் தவணை போலியோ சொட்டுமருந்து முகாம் 19.2.2012 அன்றும் இரண்டாவது தவணை 15.4.2012 அன்றும் நடைபெறவுள்ளது.
முதல் தவணை போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெறும் நாளான 19.2.2012 அன்று சென்னை மாநகரில் 5 வயதிற்குட்பட்ட சுமார் ஐந்தரை இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து கொடுப்பதற்கு 1126 சொட்டுமருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
போலியோ நோயை அடியோடு ஒழிக்க வேண்டுமானால், பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டுமருந்து கொடுக்க வேண்டும். உங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள சொட்டுமருந்து மையத்திற்குச் சென்று போலியோ சொட்டுமருந்து போட்டுக் கொள்ளப்பட வேண்டும்.
சொட்டுமருந்து குழந்தைகளுக்கு கொடுத்தவுடன் இடது கை சுண்டுவிரலில் அடையாள மை வைக்கப்படும். எந்த ஒரு குழந்தையும் போலியோ சொட்டுமருந்து கொடுப்பதில் இருந்து விடுபடாமல் இருப்பதற்கு அடையாள மை வைக்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ சொட்டுமருந்து முறையாக கொடுத்திருந்தாலும் 19.2.2012 அன்று நடைபெறும் முதல் தவணை போலியோ சொட்டுமருந்து முகாமில் அவசியம் சொட்டுமருந்து குழந்தைகளுக்கு போட்டுக் கொள்ள வேண்டும். முகாம் நாட்களில் கொடுக்கப்படும் சொட்டுமருந்தும் வழக்கமான தவணைகளில் கொடுக்கப்படும் சொட்டுமருந்தும் மாற்று மருந்து அல்ல. இது ஒரு கூடுதல் தவணையாகும்.
முதல் தவணை போலியோ சொட்டுமருந்து 19.2.2012 அன்று குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு, சென்னை மாநகராட்சி நலவாழ்வு மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், மருந்தகங்கள், சத்துணவு மையங்கள், தனியார் மருத்துவமனைகள், பொருட்காட்சி அரங்கம், இரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சொட்டுமருந்து மையங்கள் ஆகியவற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் மெரினா கடற்கரை, சுற்றுலா பொருட்காட்சி, புறநகர் பேருந்து நிலையங்களில் நடமாடும் சொட்டுமருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுளளது.
மற்ற மாநிலங்களில் இருந்து வேலை நிமித்தம் காரணமாக சென்னை மாநகரில் குடியேறி, இங்கு தொடர்ந்து தங்கி இருப்பவர்கள் இந்த நாளில் அதாவது 19.2.2012 அன்று தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து கொடுத்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். அது மட்டுமின்றி 19.2.2012 அன்று சென்னை வந்து போகும் குழந்தைகளுக்கும் தவறாமல் சொட்டுமருந்து போட்டுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிகிறாம்.
போலியோ சொட்டுமருந்து முகாம் காலை 7.00 மணிக்கு தொடங்கி இடைவெளியின்றி மாலை 5.00 மணிவரை தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications