தனியார் பள்ளிகளில் ஏழை குழைந்தைகளுக்கு 25% இடஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு
சென்னை: தனியார் பள்ளிகளில் தொடக்க வகுப்புகளில் நலிந்த, வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அது வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் விவரம் வருமாறு,
குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குக் குறைவாக இருந்தால் அவர்களை நலிந்த பிரிவினராகக் கருதி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
அதேபோல் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பெற்றோர் இல்லாத குழந்தைகள், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டோர், திருநங்கையர், துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் இந்த ஒதுக்கீட்டில் இடம் வழங்க வேண்டும். இவை தொடர்பான சான்றிதழ்கள் தகுதி பெற்ற அலுவலரால் வழங்கப்பட வேண்டும்.
இந்தக் குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்கும் அலுவலர்கள்:
வருமானச் சான்றிதழ் - வட்டாட்சியர்
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான ஜாதி சான்றிதழ் - துணை வட்டாட்சியர்
தாழ்த்தப்பட்டோருக்கான ஜாதி சான்றிதழ் - வட்டாட்சியர்
பழங்குடியினருக்கான ஜாதி சான்றிதழ் - மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியர்
ஆதரவற்றோர் சான்றிதழ் - மாவட்ட சமூக நலத் துறை அலுவலர்
எச்.ஐ.வி. மற்றும் திருநங்கையர் சான்றிதழ் - தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ அலுவலர்
துப்புரவுப் பணியாளர்களின் குழந்தைகளுக்கான சான்றிதழ் - மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களால் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர், பேரூராட்சி செயல் அலுவலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள்
பிற அலுவலகங்களில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களின் குழந்தைகள் - மாவட்ட ஆட்சியர் அல்லது அவரால் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்
இந்தப் பிரிவின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்களை தகுதி வாரியாகப் பிரித்து வைக்க வேண்டும். 25 சதவீத இடங்களுக்கு மேல் விண்ணப்பங்கள் பெறப்பட்டால் ரேண்டம் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுதல் வேண்டும்.
மாணவர் சேர்க்கைப் பட்டியலை பொதுமக்களின் பார்வைக்காக தகவல் பலகையில் இடம்பெறச் வேண்டும். இந்த ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பப் படிவங்கள் அளித்தல், மாணவர் சேர்க்கை இவையெல்லாம் மே மாதத்தில்தான் செயல்படுத்தப்பட வேண்டும்.
பள்ளி நிர்வாகம், பொதுமக்களின் சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 044-28278742 என்ற எண்ணில் இந்தக் குழுவைத் தொடர்பு கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.