மாலத்தீவில் ரஞ்சன் மத்தாயின் 'கட்டப் பஞ்சாயத்தில்' முன்னேற்றம்!
மாலே: மாலத்தீவில் இந்திய வெளியுறவுச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் நடத்திய ஆலோசனைகளுக்குப் பிறகு விரைவில் தேர்தலை நடத்த அந்நாட்டு கட்சிகள் ஒப்புக் கொண்டுள்ளன. இந்தியாவின் நிலைப்பாட்டில் சந்தேகம் கொண்டிருந்த முன்னாள் அதிபர் நஷீத்தும் இப்போது திருப்தியடைந்திருக்கிறார்.
மாலத்தீவு அதிபராக அப்துல் கயூம் இருந்தபோது பிராந்திய பாதுகாப்பு கருதி அந்நாட்டை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க இந்தியா பகீரத பிரயத்னம் செய்து பார்த்தது. இந்திய புலனாய்வு அமைப்புகள் ரகசிய ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளையும் நடத்திப் பார்த்தன.
கடந்த தேர்தலில் கயூமை நஷீத் தோற்கடித்து ஆட்சிப் பொறுப்பேற்ற தொடக்க காலத்தில் பாதுகாப்பு விவகாரத்தில் இந்தியாவுக்காக மாலத்தீவு கதவுகளை திறந்துவிட்டது.
இந்தியாவும் மாலத்தீவும்
2008-ம் ஆண்டு மாலத்தீவுக்கான தூதராக இருந்த ஏ.கே.பாண்டே, நஷீத்தை இந்தியா ஆதரிக்காமல் கயூமையே ஆதரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். ஆனால் மத்திய அரசு ஏற்கவில்லை. நஷீத் வெற்றி பெற்றபோது பாண்டேவை தூதர் பொறுப்பிலிருந்து விடுவித்தது.
நஷீத்தும் தொடக்க காலத்தில் இந்தியாவின் நட்பு நாடாகவே இருந்து வந்தார்.
இந்தியப் பெருங்கடலை கண்காணிப்பதற்காக 26 ராடர்களை அமைக்கவும் நஷீத் அரசாங்கம் ஒப்புக் கொண்டது.
இந்தியப் பெருங்கடற்பரப்பில் பிராந்திய நலனுக்கான ஆபத்துகளை முறியடிக்கும் வகையில் நிரந்தரமாக 2 ஹெலிகாப்டர்களை கண்காணிப்பில் நிறுத்தி வைக்கவும் இந்தியாவுக்கு மாலத்தீவு அனுமதி அளித்தது.
நஷீத்தின் மாற்றம்
இந்த சூழலில்தான் கடந்த 2 ஆண்டுகளாக அமெரிக்கா, சீனா, பாகிஸ்தானுடன் மாலத்தீவு நெருக்கம் காட்டத் தொடங்கியது. இதனை இந்தியா ரசிக்கவில்லை.
இந்நிலையில் மாலத்தீவில் அரசியல் மாற்றம் நிகழ்ந்தது. துப்பாக்கி முனையில் நஷீத் வெளியேற்றப்பட்டபோது இந்தியா மெளனமாகவே வேடிக்கை பார்த்தது அரசியல் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது.
தற்போதைய நிலை
தாம் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருக்கக் கூடும் என்று நஷீத்தும் சந்தேகித்து இந்தியாவின் நிலைப்பாடு அதிருப்தி அளிக்கிறது என்று பகிரங்கமாகவே பேசினார்.
இந்தியப் பெருங்கடலை சீன டிராகன் விழுங்கி வரும் நிலையில் இந்தியாவின் நிலைப்பாடு அமெரிக்காவை சார்ந்ததாக இருந்தது. இதையடுத்து இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியான கணபதியை ஒப்புக்குச் சப்பாக மாலத்தீவுக்கு அனுப்பியது. அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கக் கூடிய ஒரு அரசாங்கத்தை அமெரிக்கா ஆதரவுடன் உருவாக்கினர்.
இந்நிலையில் திடீர் ஞானோதயமாக இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் ரஞ்சன் மத்தாய் மாலத்தீவில் டெண்ட் போட்டு பஞ்சாயத்து பேசி வருகிறார். அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து நஷீத் விரைவில் தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார் மத்தாய்.
நஷீத்தையும் சந்தித்துப் பேசி சமாதானப்படுத்த இந்தியாவின் தற்போதைய செயல்பாடு திருப்தி அளிக்கிறது என்று பேட்டியளித்திருக்கிறார். புதிய அதிபராகப் பொறுப்பேற்ற வகீத்தும் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.
இதனால் புதிய அரசுக்கு எதிராக நஷீத் ஆதரவாளர்கள் நடத்த திட்டமிட்டிருந்த போராட்ட அறிவிப்புகள் ஓய்வுக்குத் திரும்பியுள்ளன.