இந்திய சட்டப்படி எங்களை தண்டிக்க முடியாது: இத்தாலிய கப்பல் அதிகாரிகள்
திருவனந்தபுரம்: இந்திய மீனவர்களை சுட்டுப் படுகொலை செய்த இத்தாலியர்கள், இந்திய சட்டப்படி எங்களைத் தண்டிக்க முடியாது என்றுகூறி கொலையாளிகளை ஒப்படைக்க மறுத்து வருகின்றனர்.
சம்பவம் நடந்த இடம் சர்வதேச கடற்பரப்பாகும். இதனால் இந்திய சட்டப்படி எங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்கின்றனர் இத்தாலிய கப்பல் குழுவினர்.
மேலும் கேரள காவல்துறையினர் கொடுத்துள்ள நோட்டீஸை இத்தாலிய வெளியுறவு அமைச்சகத்துக்கு அனுப்பியிருப்பதாக இத்தாலி கப்பல் குழுவினருக்கு உதவி வரும் வழக்கறிஞர் மாத்யூஸ் தெரிவித்துள்ளார்.
நிராயுதபாணிகளாக இருந்த மீனவர்களை படுகொலை செய்த விவகாரம் ஏற்கெனவே இந்திய-இத்தாலி உறவில் சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் கொலையாளிகளை ஒப்படைக்க மறுக்கும் விவகாரம் நிலைமையை சீர்குலைத்து வருகிறது.
சர்வதேச கடற்பரப்பா?
இதனிடையே மீனவர்கள் மீன்பிடித்த கடற்பரப்பு இந்திய கடற்பரப்புதான் என்றும் எப்போதும் கொள்ளையர் நடமாட்டம் இருந்தது இல்லை என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதே போல் மேற்கு கடலோர காவல்படை கமாண்டர் பசாராவும், துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த இடம் இந்திய கடற்பரப்புதான் என்று கூறியுள்ளார்.
மீனவர்கள் படுகொலை தொடர்பாக ஏற்கெனவே இத்தாலிய தூதரை நேரில் அழைத்து வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்திருந்தது.
இதேபோல் மீனவர்களைப் படுகொலை செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.,கே. அந்தோணி தெரிவித்திருந்தார்.