ப.சி. நிகழ்ச்சியை புறக்கணித்து எதிர்ப்பு தெரிவித்த மமதா!
கொல்கத்தா: தேசிய தீவிரவாத தடுப்பு மையம் தொடர்பான சர்ச்சை விஸ்வரூபமெடுத்து வரும் நிலையில் கொல்கத்தாவில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்ற நிகழ்ச்சியை புறக்கணித்து அதிரடியை கிளப்பியிருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி.
தேசிய தீவிரவாத தடுப்பு மையத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட 8 மாநில முதல்வர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மாநில உரிமைகளை அபகரிக்கும் இத்திட்டத்தின் அறிவிப்பின் பின்னணியில் ப.சிதம்பரம் போன்ற அமைச்சர்கள் இருப்பதாக மாநில முதல்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற தேசிய பாதுகாப்பு மைய தொடக்க விழாவில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டார்.
ஆனால் மாநில முதல்வர் மமதா பானர்ஜி இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளார்.
இந்நிகழ்ச்சி தொடர்பாக மாநில அரசு தயாரித்திருந்த விழா அழைப்பிதழில் மமதா பெயரை நீக்கவும் செய்துள்ளனர்.
தேசிய தீவிரவாத தடுப்பு மையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 14-ந் தேதி பிரதமர் மன்மோகனுக்கு மமதா கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் ப.சிதம்பரத்தின் நிகழ்ச்சியை மமதா புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.