சென்னையில் ஒரு மணிநேரம் கூடுதல் மின்வெட்டு - நாளை மறுதினம் அறிவிப்பு!
அதேபோல தொழிற்சாலைகளுக்கான உயர் மின்னழுத்த சப்ளைக்கு விதிக்கப்பட்ட 20 சதவீத மின்வெட்டு 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஒரு நாளுக்கு சுமார் 12 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது ஒரு நாளுக்கு 7 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரமே கிடைப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் தினமும் 4500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை நிலவுகிறது. மின் பற்றாக்குறை காரணமாக தமிழ்நாடு முழுவதும் மின் வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் அதிகாரப்பூர்வமாக தினமும் ஒரு மணி நேரம் மின்வெட்டு உள்ளது. ஆனால் தினசரி முன்னறிவிப்பு ஏதுமின்றி சில மணி நேரங்களுக்கு மின்சாரம் தடைப்பட்டுவிடுகிறது. பராமரிப்பு என்ற பெயரில் தினமும் நான்கைந்து பகுதிகளில் மின்சாரத்தை பகல் முழுவதும் நிறுத்துவதும் நடக்கிறது.
மற்ற மாவட்டங்களில் அதிகபட்சமாக 12 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. தொழிற்சாலைகளில் 20 சதவீதம் மின் வெட்டு கடைபிடிக்கப்படுகிறது.
பிரச்சினையை சமாளிக்க உயர்அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்திய ஜெயலலிதா, மின்தட்டுப்பாட்டை சமாளிப்பது குறித்த வழி முறைகளை அறிக்கையாக தயாரிக்குமாறு கேட்டுக் கொண்டார். பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை மின்வாரிய அதிகாரிகள் தயாரித்துள்ளனர்.
சென்னைக்கு கூடுதல் மின்வெட்டு
இந்த அறிக்கையை தமிழக அரசிடம் இன்று மின் வாரிய அதிகாரிகள் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையில், சென்னை மற்றும் பெரிய தொழிற்சாலைகளுக்கு மின்வெட்டு அளவை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் மிச்சமாகும் கணிசமான மெகாவாட் மின்சாரத்தை மற்ற மாவட்டங்களுக்கு வழங்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரையை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும் என்று தெரியவந்துள்ளது. இதன் காரணமாக தமிழ் நாட்டில் அமலில் உள்ள மின்வெட்டில் மாற்றங்கள் வர உள்ளது. சென்னையில் தற்போது ஒவ்வொரு பகுதி வாரியாக தினமும் ஒரு மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. இனி இந்த மின்வெட்டு 2 மணி நேரமாக அதிகரிக்கப்படுகிறது.
சென்னை நகருக்கு தினமும் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. கூடுதலாக ஒரு மணி நேரம் மின் வெட்டை சென்னையில் அமல்படுத்தும் பட்சத்தில் தினமும் 300 மெகாவாட் மின்சாரம் மிச்சமாக வாரியத்துக்கு கிடைக்கும்.
சென்னையில் மின்சாரத்தை மிச்சப்படுத்துவது போன்று தொழிற்சாலைகளுக்கும் விடுமுறை தினம் அறிவித்து, மின்சாரத்தை மிச்சப்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போது தொழிற்சாலைகளுக்கு 20 சதவீத மின்வெட்டு உள்ளது.
இந்த மின்வெட்டு 40 சதவீதமாக அதிகரிக்கப்பட உள்ளது. மேலும் பெரிய தொழிற்சாலைகளுக்கு 2 நாட்கள் மின்சார விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் 700 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும்.
சென்னையில் மிச்சமாக கிடைக்கும் 300 மெகாவாட், தொழிற்சாலை விடுமுறையால் மிச்சமாக கிடைக்கும் 700 மெகா வாட்மூலம் மின்சார வாரியத்துக்கு தினமும் சுமார் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இந்த மின்சாரத்தை சென்னை தவிர்த்த மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்து கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை காரணமாக மாவட்டங்களில் உள்ள மின்வெட்டு நேரம் கணிசமாக குறையும். தற்போது சென்னை தவிர தமிழ்நாடு முழுவதும் 8 முதல் 12 மணி நேர மின்வெட்டு உள்ளது. இந்த மின்வெட்டு 6 முதல் 8 மணி நேரமாக குறையும்.
மக்கள் ஆத்திரம்
இதற்கிடையே மின் வெட்டை அமல்படுத்துவதில் பயங்கர குளறுபடிகள் நடப்பதாக மக்கள் குற்றச்சாட்டுகிறார்கள். 'எந்தெந்த நேரங்களில் மின்சாரம் வராது என்பதை தெள்ளத் தெளிவாக சொல்லித் தொலையுங்கள், அதற்கு ஏற்ப, வேலைகளை வைத்துக் கொள்கிறோம்," என்று கூறும் அளவுக்கு மக்கள் தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொள்கின்றனர்.
எனவே மாவட்டங்களுக்கு மின்வெட்டு நேரம் குறைப்பு அறிவிப்பு வெளியிடப்படும் போது, எந்தெந்த நேரத்தில் மின்சாரம் இருக்காது என்ற விவரம் தெளிவாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் புதிய மின் வெட்டு குறைப்பு நாளை மறுநாள் (20-ந் தேதி திங்கட்கிழமை) முதல் நடை முறைக்கு வருகிறது.