திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் பொக்கிஷங்களை மதிப்பிடும் பணி தொடக்கம்
திருவனந்தபுரம்: பத்மநாபசுவாமி கோயிலின் பொக்கிஷங்களை மதிப்பிடும் பணி இன்று காலை தொடங்கியுள்ளது.
உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட எம்.வி. நாயர் தலைமையிலான குழு, எம்.என். கிருஷ்ணன் தலைமையிலான குழு முன்னிலையில் பொக்கிஷங்களை மதிப்பிட்டு ஆவணப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கேரள அரசு பிரதிநிதிகள், திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரும் இக்குழுக்களில் இடம்பெறுள்ளனர்.
திருவனந்தபுரம் கோயில் உள்ள பாதாள அறைகளில் லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொக்கிஷங்கள் இருப்பதாக தெரியவந்தது.
பணக்கார சாமி என்றழைக்கப்பட்ட திருப்பதியை பின்னுக்கு தள்ளி உலகிலேயே பணக்கார சாமி என்ற அதிரடிப் பெருமை திருவனந்தபுரம் கோயிலுக்குக் கிடைத்தது.
பின்னணி
திருவனந்தபுரம் கோயில் பொக்கிஷங்களை வெளிப்படுத்த வேண்டும் என்ரு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி சுந்தரராஜன் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த ஜூலையில் பாதாள அறைகளைத் திறக்க குழு அமைத்தது. இதையடுத்து நவீன கருவிகளின் உதவியுடன் திருவனந்தபுரம் கோயிலின் பாதாள அறைகள் திறக்கப்பட்டு அவை வீடியோ படமாக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இருப்பினும் ஏ,பி என்று பெயரிடப்பட்ட இரண்டு அறைகள் மட்டும் திறக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து பாதாள அறைகளைத் திறந்து பொக்கிஷங்களை மதிப்பிடுவது ஆண்டவனுக்கு பிடித்திருக்கிறதா? என்று அறிய தேவ பிரசன்னம் என்ற ஜோதிட நிகழ்ச்சியும் நடத்திப் பார்த்தனர்.
இந்நிலையில் வழக்குத் தொடர்ந்த சுந்தரராஜன் மறைந்து போக கோயில் பாதாள அறைகளைத் திறந்ததால்தான் இந்த நிலைமை என்றும் 2 அறைகளை திறந்தால் பெரும் அழிவு ஏற்படும் என்றெல்லாம் வதந்தியும் கிளப்பி விடப்பட்டது.
இந்நிலையில் கடந்த 9-ந் தேதியன்று உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரான எம்.வி. நாயர், திருவனந்தபுரம் கோயில் பாதாள அறைகளில் உள்ள ஆபரணங்களை மதிப்பிடும் பணி இன்று தொடங்கும் என அறிவித்திருந்தார்.