கருணாநிதி இனி 'திராவிடப் பெருந்தலைவர்', ஸ்டாலின் 'தமிழினத் தளபதி'!-நேரு கொடுத்த பட்டம்!!
திருச்சியில் கே.என்.நேரு மகன் திருமணம் நடந்தது. இதை தனது ஆதரவு யாருக்கு என்பதைக் காட்டும் நிகழ்ச்சியாக மாற்றி விட்டார் கே.என்.நேரு. மு.க.ஸ்டாலினின் தீவிர ஆதரவாளரான அவர், அழகிரி தரப்பை கடும் கோபமேற்படுத்தும் வகையில் விளம்பரங்களையும், வரவேற்பு தட்டிகளையும் வைத்து அமர்க்களப்படுத்தியிருந்தார்.
அழகிரி படத்தை எங்குமே காண முடியவில்லை. சில போஸ்டர்களில் மட்டுமே அழகிரி படத்தைப் போட்டிருந்தனர். அதுவும் ஸ்டாலினுக்குக் கீழ்தான்.
மேலும் அனைத்து போஸ்டர்களிலும் காணப்பட்ட வித்தியாசமான வார்த்தைகள், மற்றவர்களை விட திமுகவினரையே அதிகம் ஆச்சரியப்படுத்தியது. அது கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் நேரு கொடுத்திருந்த புதிய பட்டங்கள்.
வழக்கமாக திமுகவைப் பொறுத்தவரை தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோருக்கு சம மரியாதை கொடுக்கப்பட்டு பெயர்கள் இடம் பெறும். சில நேரம் தலைவர் பெயர் முதலிலும், பொதுச் செயலாளர் பெயர் 2வதும் வரும். ஆனால் திருச்சியில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களில் இது தலைகீழாக மாறியிருந்தது.
தலைவர் பெயருக்கு நிகராக பொருளாளரான ஸ்டாலினின் பெயரையும் சமமாக போட்டிருந்தனர். மேலும் அவர்களுக்கு புதுப் பெயர்களையும் சூட்டியிருந்தனர். திராவிடப் பெருந்தலைவர் என்று கருணாநிதிக்கும், தமிழினத் தளபதி என்று ஸ்டாலினுக்கும் புதுப் பட்டம் சூட்டியிருந்தனர். இதன் உள்ளர்த்தம் என்ன தெரியுமா என்று திமுகவினர் கண் சிமிட்டி ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டதைப் பார்க்க முடிந்தது.
இந்த போஸ்டர்கள் மூலம் கருணாநிதிக்கு அடுத்து ஸ்டாலின்தான் என்பதையும், தனது ஆதரவு ஸ்டாலினுக்கு மட்டுமேதான் என்பதையும் நேரு எடுத்துக் காட்டி விட்டதாக திமுகவினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.