நடராஜன் உள்பட 3 பேருக்கு ஜாமீன் கிடையாது..தஞ்சை கோர்ட்டில் மனு டிஸ்மிஸ்
தஞ்சாவூர்: நில அபகரிப்பு முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் மற்றும் 2 பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் தஞ்சாவூர் கோர்ட்டில் நேற்று தள்ளுபடியாகி விட்டன.
தஞ்சை மாவட்டம் விளார் அன்புநகரை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் தஞ்சை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் ஒரு புகார் செய்தார். அதில் தஞ்சை விளார் பைபாஸ் சாலையில் தனது தந்தை செங்கமலம் பெயரில் உள்ள 15 ஆயிரம் சதுரஅடி நிலத்தை, சசிகலாவின் கணவர் நடராஜன் மற்றும் சிலர் சேர்ந்து ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி இருந்தார்.
அதன்பேரில் நடராஜன், அவரது அண்ணன் சாமிநாதன், அக்காள் மகன்கள் சின்னையா என்ற வெங்கடேஷ், சுரேஷ், ஒரத்தநாட்டை சேர்ந்த இளவழகன், நீடாமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் (பொறுப்பு) குபேந்திரன், மாரிமுத்து ஆகிய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இவர்களில் நடராஜனை சென்னை பெசன்ட் நகர் வீட்டில் வைத்து கைது செய்ததாக போலீஸார் தெரிவித்தனர். அதேபோல சின்னையா, குபேந்திரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். 3 பேரையும் தஞ்சாவூரில் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி பின்னர் திருச்சி சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் மூன்று பேரும் ஜாமீன் கேட்டு தஞ்சை நீதித்துறை நீதிமன்றத்தில் மனு செய்தனர். இவர்களது மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் முருகன், 3 பேருடைய கோரிக்கையையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதற்கிடையே, நடராஜனின் அண்ணன் சாமிநாதன் முன்ஜாமீன் கோரி தஞ்சாவூர் மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.