சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளை துவக்கம்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.
சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. சங்கரன்கோவில் தொகுதி தேர்தல் அலுவலராக கலால் துறை உதவி ஆணையர் செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். முதன்மை உதவி தேர்தல் அலுவலராக சங்கரன்கோவில் தாசில்தார் தாமோதரன், கலால் துறை உதவி ஆணையர் அலுவலக மேலாளர் பரமசிவன், சங்கரன்கோவில் நகராட்சி கமிஷனர் செந்தில்முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வேட்பு மனுக்களை நெல்லை கலெக்டர் அலுவலக 2ம் தளத்தில் உள்ள தேர்தல் அலுவலர் செல்வராஜ் அல்லது சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் உள்ள முதன்மை உதவி தேர்தல் அலுவலர் தாமோதரன் ஆகியோரிடம் தாக்கல் செய்யலாம். காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுக்கள் பெற்றுக் கொள்ளப்படும்.
வேட்புமனு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே செல்ல முடியும். சங்கரன்கோவில் தொகுதி தனி தொகுதி என்பதால் மனு தாக்கலின் போது கட்டணமாக ரூ.5,000 செலுத்த வேண்டும். மனுவுடன் அரசியல் கட்சியின் அங்கீகார கடிதம், சொத்து பட்டியல், ரொக்கம், வங்கி இருப்பு, வேட்பாளர் மீதான கிரிமினல் வழக்குகள் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தையும் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்.
வேட்பாளர்கள் தனி வங்கி கணக்கு தொடங்கி அதன் மூலமே தேர்தல் செலவு கணக்கை மேற்கொள்ள வேண்டும். வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரத்தையும் வேட்பாளர் தாக்கல் செய்ய வேண்டும். மனு தாக்கல் செய்ய வரும் 29ம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேட்புமனுக்களை திரும்பப்பெற மார்ச் 3ம் தேதி கடைசி நாளாகும். மேலும், மார்ச் 18ம் தேதி பதிவாகும் வாக்குகள் மார்ச் 21ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.












Click it and Unblock the Notifications