காஷ்மீரில் பனிப்பாறைகள் சரிவு- ராணுவ வீரர்கள் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு!
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில், பனிப்பாறைகள் சரிவுக்குள் சிக்கிக் கொண்டு பலியான ராணுவத்தினர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் தற்போது பலத்த பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் இரவு நேர வெப்ப நிலை மைனஸ் 5 டிகிரிக்கும் கீழ் சென்று விட்டது. மேலும் அங்கு கடுமையான பனி பெய்வதால், ஐஸ் கட்டிகள், பாறை போல இறுகி விட்டன.
இந்த நிலையில் பந்திபோரா மாவட்டம் குரேஸ் அருகே தவார் என்ற இடத்தில் இந்திய ராணுவத்தின் 109-வது படைப்பிரிவின் முகாம் செயல்பட்டு வந்தது. அந்த முகாமில் ராணுவ தளவாடங்களும் பாதுகாத்து வைக்கப்பட்டு இருந்தன. ராணுவ தளவாடங்களின் ஒர்க்ஷாப் போலவும் அந்த முகாம் செயல்பட்டு வந்தது.
பனிப்பாறைகள் சரிந்து விழுந்து அமுக்கியது
இந்த நிலையில் தவார் ராணுவ முகாமில் நேற்று இரவு ராணுவ வீரர்கள் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது திடீர் என்று பனிப்பாறைகள் சரிந்து, ராணுவ முகாம் மீது விழுந்து அமுக்கியது. இதனால் முகாமில் இருந்த ராணுவ வீரர்கள் பனிக்கட்டிகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும், ராணுவ உயர் அதிகாரிகளும், மீட்பு குழுவினரும் சம்பவ இடத்துக்கு நேற்று காலை விரைந்து சென்றனர். சம்பவ இடத்துக்கு பனிக்கட்டிகளை அகற்றும் எந்திரமும், புல்டோசர்களும் கொண்டு செல்லப்பட்டன.
21 பேர் பலி
சம்பவ இடத்தில் குவிந்து இருந்த பனிக்கட்டிகள் எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன. இதில் ஐஸ் கட்டிகளுக்குள் சிக்கி இருந்த 18 ராணுவ வீரர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் 8 ராணுவ வீரர்கள் பிணமாக மீட்கப்பட்டனர். சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
இதுபோல காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் மாவட்டம் சோனா மார்க் என்ற இடத்திலும் பனிப்பாறைகள், ராணுவ முகாம் மீது சரிந்து விழுந்தது. இதில் 3 ராணுவ வீரர்கள் இறந்து விட்டனர். இந்த இடம் கடல் மட்டத்தில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறது.
அந்த முகாமில் இருந்த அனைத்து பொருட்களும் சேதம் அடைந்து விட்டன. இதுபற்றி காஷ்மீர் மாநில இயற்கை பேரழிவுத்துறை செய்தி தொடர்பாளர் ஆமிர் அலி நிருபர்களிடம் கூறுகையில், "2 இடங்களில் ராணுவ முகாம்கள் மீது பனிப்பாறைகள் சரிந்துள்ளது. இந்த பகுதிகளுக்கு கடந்த ஒரு மாதமாக தரை வழி போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இருந்தது. எனவே சம்பவ இடங்களுக்கு மீட்பு குழுவினரை ஹெலிகாப்டர் மூலம் அனுப்பி இருக்கிறோம்'' என்றார்.
அதிகாரிகள் எச்சரிக்கை
காஷ்மீரில் பனிப்புயல் நீடித்து வருவதால், இரவு நேர வெப்ப நிலை இன்னும் குறைய வாய்ப்பு இருக்கிறது என்றும், எனவே மக்கள் பனிப்பாறைகள் அருகில் செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கடந்த ஜனவரி 24-ந்தேதி, எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் இருக்கும் கெரான் என்ற இடத்தில் பனிப்பாறைகள் சரிந்தன. அப்போது இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் ஐஸ்கட்டிகளுக்குள் சிக்கி இறந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
ஏ.கே.அந்தோணி அனுதாபம்
பனிப்பாறைகள் சரிந்து இறந்த 21 ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு, ராணுவத்துறை மந்திரி ஏ.கே. அந்தோணி அனுதாப செய்தி அனுப்பி இருக்கிறார். அவர்களின் குடும்பங்களுக்கு உரிய உதவிப்பணம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.