பெரும்பான்மை கிடைக்கலைன்னா குடியரசுத் தலைவர் ஆட்சிதான்: சொல்கிறார் மத்திய அமைச்சர்
லக்னெள: உத்தரபிரதேசத்தில் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்று பேசி மற்றொரு மத்திய அமைச்சர் புதிய சர்சைக்கு வித்திட்டுள்ளார்.
சர்ச்சை அமைச்சர்கள்
உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால், முஸ்லிம்களுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு அளிப்போம் என்று மத்திய அமைச்சர்கள் சல்மான் குர்ஷித், பெனி பிரசாத் வர்மா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சல்மான் குர்ஷித் விவகாரம், குடியரசுத் தலைவர் வரைக்குப் போனது.
பெனிபிரசாத் வர்மாவும் தேர்தல் ஆணையத்துக்கு சவால்விட்டிருந்தார்.
இவ்விவகாரம் முடிவுக்கு வரும் முன்பே மற்றொரு மத்திய அமைச்சரின் பேச்சால் புதிய சர்ச்சை உருவாகி இருக்கிறது.
புதிய சர்ச்சை
மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் ஜெய்ஸ்வால் கான்பூர் நகரில் தேர்தல் பிரசாரத்தின் போது செய்தியாளர்களிடம் பேசுகையில், உத்தரபிரதேசத்தில் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்கா விட்டால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்றார்.
இந்த பேச்சு, தற்போது பிரச்சினையை கிளப்பி இருக்கிறது. பாரதிய ஜனதா உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் ஜெய்ஸ்வாலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.
" காங்கிரஸ் கட்சிக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை என்பதை, மத்திய அமைச்சரின் பேச்சு காட்டுகிறது. அவரது பேச்சு வாக்காளர்களை மிரட்டும் செயலாக அமைந்து இருக்கிறது" என்று பா.ஜ.க. மூத்த தலைவர் உமாபாரதி சாடியுள்ளார்.
இது தொடர்பாக ஜெய்ஸ்வால் கூறியுள்ளதாவது:
கான்பூரில் நான் அளித்த பேட்டி திரித்து வெளியாகி இருக்கிறது. உ.பி.யில் காங்கிரசின் வெற்றியை யாரும் தடுத்து விட முடியாது. நிச்சயமாக காங்கிரஸ் ஆட்சியை அமைக்கும்' என்று தெரிவித்தேன்.
அப்போது ஒரு செய்தியாள்ர, ஆட்சி அமைக்கும் அளவில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், என்ன செய்வீர்கள்?' என்று கேட்டார்.
இதற்கு நான் பதில் அளிக்கையில், எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், அரசியல் சட்டப்படி குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும்' என்று கூறினேன். ஆனால் எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது என்றார் அவர்.