பத்மநாபசுவாமி கோவிலின் சி, டி அறைகளைத் திறக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் ரகசிய அறைகளில் சி, டி ஆகிய அறைகளைத் திறந்து அதில் உள்ள பொக்கிஷங்ளை மதிப்பிட வேலாயுதன் நாயர் தலைமையிலான குழுவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
திருவனந்தபுரம் பதம்நாப சுவாமி கோவிலின் ரகசிய அறைகளில் உள்ள பொக்கிஷங்களை மதிப்பிடும் பணி கடந்த 20ம் தேதி முதல் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது இ மற்றும் எஃப் ஆகிய அறைகளில் உள்ள பொக்கிஷங்கள் மதிப்பிடப்படுகின்றன. இந்நிலையில் சி மற்றும் டி அறைகளைத் திறக்கக் கூடாது என்று கூறி திருவனந்தபுரம் முதன்மை சப்-கோர்ட் அந்த அறைகளுக்கு சீல் வைத்தது. இதையடுத்து அந்த 2 அறைகளைத் திறக்க அனுமதி கோரி மதிப்பீட்டு குழு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் சி மற்றும் டி அறைகளைத் திறந்து அதில் உள்ள பொக்கிஷங்களை மதிப்பிட வேலாயுதன் நாயர் தலைமையிலான குழுவுக்கு அனுமதி அளித்தது. மேலும் இனி பத்மநாப சுவாமி கோவில் விவகாரத்தில் தலையிடக் கூடாது என்று சப்-கோர்ட்டுக்கு உத்தரவிட்டுள்ளது. மதிப்பீட்டுக் குழு அனுமதியுடன் சி மற்றும் டி அறைகளில் உள்ள பாத்திரங்களை பூஜைகளுக்குப் பயன்படுத்தலாம் என்றும் அது தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இ மற்றும் எஃப் அறைகளில் உள்ள பொக்கிஷங்களை மதிப்பிடும் பணி முடியாததால் சி மற்றும் டி அறைகளை என்று திறக்கலாம் என்பது குறித்து மதிப்பீட்டுக் குழு இன்று கூடி முடிவு செய்கிறது.