டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட 2 பேர் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு
சங்கரன்கோவில்: புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட 2 பேர் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலையொட்டி புதிய தமிழகம கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று குருவிகுளம் ஒன்றியம் பழைய அப்பனேரி கிராமத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் தேர்தல் விதிமுறையை மீறி அந்த கிராமத்தில் கட்சிக் கொடி ஏற்றியதோடு, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் பொது மக்களிடம் கருத்து கேட்டாராம்.
இது தேர்தல் விதிமுறையை மீறிய செயல் என கூறி டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் குருவிகுளம் ஒன்றிய செயலாளர் மாடசாமி ஆகிய இருவர் மீது திருவேங்கடம் இன்ஸ்பெக்டர் ராஜராஜன் வழக்குப் பதிவு செய்தார். இதுவரை தேர்தல் விதி மீறியதாக 305 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சங்கரன்கோவிலில் தேர்தல் விதிகளை மீறயதாகக் கூறி அமைச்சர்கள் கோகுல இந்திரா, சிவபதி ஆகியோருக்கு பாதுகாப்புக்கு வந்த போலீஸ் வாகனங்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செயதனர் என்பது குறிப்பிடத்தக்கது.