கொள்ளையர்களை காட்டிக் கொடுத்தது கட்டம்போட்ட சட்டை

வங்கி கொள்ளையர்கள் 5 பேரும் சென்னை வேளச்சேரி நேரு நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் தரை தளத்தில் தங்கி இருந்தனர்.
இந்த நிலையில், வங்கி கொள்ளையர்களில் ஒருவன் என சந்தேகிக்கப்படம் நபரின் வீடியோ மற்றும் புகைப்படத்தை நேற்று முன்தினம் சென்னை நகர போலீஸ் கமிஷனர் திரிபாதி வெளியிட்டார்.
அந்த படத்தில் அவன் சிவப்பு, வெள்ளை நிற கட்டம் போட்ட சட்டை அணிந்து இருந்தான்.
30 வயது மதிக்கத்தக்க அவன் லேசாக தாடியும் வைத்து இருந்தான்,
அவன்தான் கொள்ளை கும்பலின் தலைவனாக இருக்கக்கூடும் என்று கருதிய போலீசார், அந்த நபரை பற்றி தெரிந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று கமிஷனர் திரிபாதி அறிவித்தார்.
ரூ20 ஆயிரத்தால் பிடிபட்டனர்
தமது படம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான நிலையில் நிச்சயம் போலீஸிடம் சிக்கிக் கொள்ளப்போகிறோம் என்று வினோத்குமார் முடிவு செய்தான்.
இதையடுத்து வீட்டு உரிமையாளரிடம் திடீரென வீட்டைக் காலி செய்யப் போவதாக கூறியிருக்கிறான்.
ஆனால் முன்பணத்தை உரிமையாளர் உடனே தர முடியாது என்றும் மறுநாள் தருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வீட்டின் உரிமையாளரான பெண்மணியின் தம்பி முருகன் என்பவர், தனது அக்காள் வீட்டில் இருந்து கீழே இறங்கி வந்தார்.
தரை தளத்தில் உள்ள துணி காயப் போடும் கொடியில் சிவப்பு, வெள்ளை நிற கட்டம் போட்ட சட்டை காயப் போடப்பட்டு இருந்தது.
அதை பார்த்ததும், தொலைக்காட்சியில் பார்த்த கொள்ளையன் அணிந்து இருந்த சட்டையைப் போல் இருந்ததால் சட்டென உஷாரானார்.
இதனால் கீழே தரை தளத்தில் உள்ள வீட்டில் தங்கி இருக்கும் இளைஞர்களை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார். அவர்களும் தொலைக்காட்சியில் கொள்ளையனின் படம் காட்டப்படுவதை பார்த்துக் கொண்டு இருந்தனர்.
உடனே மீண்டும் மாடிக்கு ஏறி ஓடிய முருகன் தனது அக்காளிடம்; அவர்களிடம் பணம் தொகையை கொடுத்து விடாதே. டி.வி.யில் காட்டப்படும் கொள்ளைக்காரன் அவர்களில் ஒருவன் போல் இருக்கிறான். நான் இதுபற்றி போலீசுக்கு சென்று தகவல் தெரிவிக்கிறேன்'' என்று கூறிவிட்டு உடனடியாக அங்கிருந்து கிண்டி போலீஸ் நிலையத்துக்கு சென்றார்.
அங்கு போலீசாரிடம், கொள்ளையர்கள் தங்கி இருப்பது பற்றிய விவரத்தை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, இரவில் போலீசார் வந்து அந்த வீட்டை சுற்றி வளைத்தனர்.
20 ஆயிரம் ரூபாய் போனால் போகிறது'' என்று நேற்று முன்தினம் மாலையே கொள்ளையர்கள் வீட்டை காலி செய்து விட்டு கிளம்பி இருந்தால் தப்பி இருப்பார்கள். ஆனால் பணத்துக்காக காத்திருக்க முடிவு செய்ததால் அவர்களுடைய கதை முடிந்து விட்டது.












Click it and Unblock the Notifications