கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு.. உ.பி. தேர்தலுக்கு பின் டீசல்-கேஸ் விலை கடுமையாக உயரும்..
விரைவிலேயே இந்த விலை 150 டாலரை எட்டும் என்றும் அஞ்சப்படுகிறது.
இதுவரை கச்சா எண்ணெய் விலை மிக மிக அதிகபட்சமாக பேரல் ஒன்றுக்கு 147 டாலரை எட்டியது. இது நடந்தது 2008ம் ஆண்டு ஜூன் மாதத்தில். இதன் பிறகு இப்போது மீண்டும் அதே நிலையை நோக்கி கச்சா எண்ணெய் விலை போய்க் கொண்டுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை இப்போது ஒரு பேரல் 122 டாலர் முதல் 124 டாலர் என்ற விலைக்கு கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. கடந்த 9 மாதங்களில் கச்சா எண்ணெய்க்கு இந்தியா செலவிடும் அதிகபட்ச தொகை இது தான்.
நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதிகளுக்கு ஆகும் செலவில் கச்சா எண்ணெய்க்கு இந்தியா செலவிடும் தொகை மட்டுமே 40 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது நமது அன்னிய செலாவணியில் கிட்டத்தட்ட பாதியை கச்சா எண்ணெய் இறக்குமதிக்காகவே செலவிட்டு வருகிறோம்.
அந்த வகையில் இந்த ஆண்டு கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவு மட்டும் 142 பில்லியன் டாலர்களைத் தாண்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
ஆனால், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலையை மத்திய அரசு உயர்த்தாமல் இருப்பதால் நாள் தோறும் மத்திய எண்ணெய் நிறுவனங்கள் சந்தித்து வரும் நஷ்டம், ரூ 465 கோடி.
பெட்ரோல் விலையை அவ்வப்போது உயர்த்திவிட்டதால், பெரிய அளவிலான நஷ்டம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதை உயர்த்தாமல் இருந்திருந்தால் ஒரு நாளைக்கான நஷ்டம் ரூ. 1,000 கோடியைத் தாண்டியிருக்கும் என்கிறார்கள்.
உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல்கள் நடந்து வருவதால் டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்துவதை மத்திய அரசு தள்ளிப் போட்டுக் கொண்டுள்ளது. வாக்குப் பதிவுகள் முடிந்தவுடன் இன்னும் சில வாரங்களிலேயே பெரும் விலை உயர்வுகள் அறிவிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.