'பவர் கட்'டால் மனுவைப் பார்க்க சிரமப்பட்ட தேர்தல் அதிகாரி-அழகிரி தாக்கு!

திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியக்குமார் இன்று பிற்பகல், மின்வெட்டு அமலில் இருந்த நேரமாக பார்த்து தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த இந்த வேட்பு மனு தாக்கலின்போது ஆயிரக்கணக்கான திமுகவினர் மு.க.அழகிரி தலைமையில் திரண்டு வந்திருந்தனர்.
வேட்பு மனு தாக்கலுக்குப் பின்னர் அழகிரியை சந்தித்த செய்தியாளர்கள் திமுகவின் வெற்றி வாய்ப்பு குறித்துக் கேட்டனர். அதற்கு அழகிரி பதிலளிக்கையில், 15,000 முதல் 20,000 வாக்கு வித்தியாசத்தில் ஜவஹர் சூரியக்குமார் வெற்றி பெறுவார் என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், மனுத் தாக்கல் செய்யும்போது மின்சாரம் இல்லை. இதை முன்னிறுத்தியே மக்களிடம் பிரசாரம் செய்வோம். மின்தடையால் தேர்தல் அலுவலர் மனுவை மிகுந்த சிரமப்பட்டு படித்துப் பார்க்க நேர்ந்தது. மின்தடையால் மக்கள் படும் அவதியை தேர்தல் பிரசாரத்தில் முன்னிறுத்துவோம் என்றார்.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டபோது, நடுநிலையாக செயல்படுகிறதா என்பதை இனிதான் பார்க்க வேண்டும் என்றார் அழகிரி.
32 அமைச்சர்களை தொகுதியில் அதிமுக அரசு குவித்துள்ளதே என்ற கேள்விக்கு நோ கமெண்ட்ஸ் என்று பதிலளித்தார் அழகிரி.












Click it and Unblock the Notifications