தூதரக கார் வெடிப்பு பின்னணியின் ஈரான்: இஸ்ரேல் குற்றச்சாட்டு
ஜெருசலம்: டெல்லியில் பிரதமர் வீடு அருகே இஸ்ரேல் தூதரின் மனைவி சென்ற கார் மீது குண்டு வீசப்பட்டதில் ஈரானுக்கு தொடர்பு இருப்பதாக இந்தியா கண்டுபிடித்துள்ளது என்று இஸ்ரேல் நாட்டு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 13ம் தேதி இஸ்ரேல் தூதரகத்திற்கு சொந்தமான இன்னோவா எஸ்யுவி கார் பிரதமர் மன்மோகன் சிங் வீடு உள்ள ரேஸ்கோர்ஸ் ரோட்டில் இருந்து 7 கிமீ தொலைவில் உள்ள ஒரு பெட்ரோல் பம்ப் அருகே திடீர் என்று வெடித்தது. இதில் இஸ்ரேல் தூதரின் மனைவி உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
தூதரகக் கார் பின்னால் ஒருவர் பைக்கில் வந்து ஸ்டிக்கர் குண்டை ஒட்டிவிட்டுப் போனது விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து டெல்லி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இஸ்ரேல் நாட்டு பாதுகாப்புத் துறை உயர் அதிகாரி கூறியதாக அந்நாட்டு பத்திரிக்கையில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது,
டெல்லியில் இஸ்ரேல் தூதரின் மனைவி சென்ற கார் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் ஈரானுக்கு தொடர்பு உள்ளது என்பதை இந்திய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். காரில் ஸ்டிக்கர் குண்டை ஒட்டியவன் வந்த பைக்கை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த பைக் எங்கு வாங்கப்பட்டது என்பதையும் டெல்லி போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருப்பதை இந்தியா கண்டுபிடித்தும் அதை பகிரங்கமாக தெரிவிக்க தயங்குகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.