சமைத்துப் போட்டவர் சம்பளம் கேட்டதால் அடித்து உதைத்த வட மாநில மாணவர்கள்!
சென்னை: சமையல் செய்து கொடுத்தவர் அதற்கான பணத்தைக் கேட்டதற்காக அவரை அடித்து உதைத்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக 2 பீகார் மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் 6 மாணவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
சமீபத்தில்தான் சென்னை வேளச்சேரியில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட வட மாநிலக் கொள்ளையர்கள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் சில வட மாநில மாணவர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ஒருவரை அடித்து உதைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலவாக்கத்தைச் சேர்ந்தவர் சுஜீத். இவர் நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் பகுதிகளில் வாடகை வீடுகளில் தங்கிப் படித்து வரும் வட மாநில மாணவர்களுக்கு சமையல் செய்து கொடுத்து வருகிறார். இதற்காக கட்டணம் வாங்குவார்.
ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்கி சத்யபாமா பொறியியல் கல்லூரியில் படித்து வரும் 8 மாணவர்களுக்கும் சுஜீத்தான் சமையல் செய்து வந்தார். ஆனால் அதற்குரிய கட்டணத்தை அவர்கள் செலுத்தாமல் இருந்து வந்துள்ளனர். இதையடுத்து தனது சகோதரர் ரஞ்சித்திடம் இதுகுறித்துக் கூறினார் சுஜீத்.
இதையடுத்து ரஞ்சித், அந்த மாணவர்களிடம் போய் ஏன் பணம் கொடுக்காமல் இருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள், ரஞ்சித்தை சரமாரியாக அடித்து உதைத்து ஒரு அறையில் போட்டனர். பின்னர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளனர்.
படுகாயமடைந்த ரஞ்சித்தை ஒரு பைக்கில் ஏற்றி சாலையோரமாக போட்டு விட்டுப் போய் விட்டனர். தட்டுத் தடுமாறி எழுந்த ரஞ்சித், தனது வீட்டுக்குப் போனார். அவர்வந்த கோலத்தைப் பார்த்துப் பதறிப் போன அந்த வீட்டின் உரிமையாளர், என்ன என்று கேட்டுள்ளார். நடந்ததைக் கூறினார் ரஞ்சித். இதையடுத்து ரஞ்சித்தை அழைத்துக் கொண்டு நீலாங்கரை காவல் நிலையத்திற்குப் போனார் வீட்டு உரிமையாளர். அங்கு ரஞ்சித் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீஸார் சம்பந்தப்பட்ட வீட்டுக்கு விரைந்தனர். அங்கிருந்த எட்டு மாணவர்களையும் காவல் நிலையம் கொண்டு சென்றனர். அங்கு நடந்த விசாரணைக்குப் பின்னர் பாண்டே மற்றும் ஆனந்த் ஆகிய இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2 கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த துப்பாக்கிகள் பீகாரிலிருந்து கள்ளச் சந்தையில் பெறப்பட்டதாகும். சம்பந்தப்பட்ட மாணவர்களும் பீகாரைச் சேர்ந்தவர்கள ஆவர்.
இந்த மாணவர்கள் துப்பாக்கி வைத்திருந்தது ஏன் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருவதாக இணை ஆணையர் சண்முகராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.