கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்துக்கும் நக்சல்களுக்கும் தொடர்பு இல்லை: உதயகுமார் கண்டனம்

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்ட அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அருகே உள்ள இடிந்தகரை கிராமத்தில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது.
அணுமின் நிலையத்தில் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டதை கண்டித்தும், கூடங்குளம் பகுதியில் 144 தடை உத்தரவை நீக்கக் கோரியும் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், நிர்வாகி புஷ்பராயன் உள்பட 15 பேர் இடிந்தகரையில் சாகும்வரை உண்ணாவிரதம் அறிவித்து இருந்து வருகிறார்கள். இந்த போராட்டம் நேற்று 7-வது நாளாக நீடித்தது.
அவர்களுக்கு ஆதரவாக இடிந்தகரை, கூடங்குளம், கூட்டப்புளி, கூத்தங்குழி உள்பட பல்வேறு கடலோர மீனவ கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானவர்கள் நேற்றும் போராட்ட பந்தலில் திரண்டனர். உதயகுமார், புஷ்பராயன் ஆகியோர் சோர்வாக காணப்பட்டனர்.
போராட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர். அவர்கள் அணு உலைக்கு எதிராக பாடல்கள் பாடிய படியும், கோஷமிட்டபடியும் இருந்தனர்.
போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கூடங்குளம் அணு உலையால் இந்தப் பகுதி மக்களுக்கு ஏராளமான பாதிப்புகள் ஏற்படும். எனவே எங்கள் வாழ்வுரிமையை பாதுகாக்க கூடங்குளம் அணுமின் நிலையம் வேண்டாம் என்று கூறி அகிம்சை வழியில் கடந்த 8 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறோம். எங்கள் போராட்டத்துக்கு எப்போதும் போல் மக்கள் ஆதரவு உள்ளது.
பாஸ்போர்ட் மறுப்பு
கூடங்குளத்தில் போலீஸ் குவிக்கப்பட்டதை கண்டித்து தற்போது 7-வது நாளாக நான் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறேன். பல்வேறு கட்சியினரும், அமைப்புகளும் எனது உண்ணாவிரதத்தை அங்கீகரித்து உள்ளனர். நாங்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாக கூறி கொச்சைப்படுத்தினார்கள். மக்கள் கொடுக்கும் நிதி உதவியில் தான் எங்கள் போராட்டம் நடந்து வருகிறது என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் வெளிநாட்டு வேலைக்கு செல்ல பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்து உள்ளனர். ஆனால், அவர்கள் மீது போலீசில் வழக்கு இருப்பதாக கூறி பாஸ்போர்ட் கொடுக்க மறுக்கிறார்கள்.
நக்சல்களா?
எங்களுக்கும், நக்சலைட் தீவிரவாத அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக சிலர் பொய் தகவலை பரப்புகிறார்கள். இது முழுக்க முழுக்க பொய் பிரசாரம். நக்சலைட்டுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றார் அவர்.
இடிந்தகரை போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கூடங்குளம், இடிந்தகரை, கூத்தங்குழி உள்ளிட்ட ஊர்களில் நேற்றும் வியாபாரிகள் கடைகளை அடைத்து இருந்தனர். மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாததால் கடற்கரையில் படகுகள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டு இருந்தன.












Click it and Unblock the Notifications