கூடங்குளம் விவகாரம்: ஜெயலலிதாவுக்கு குவைத் தமிழர் கூட்டமைப்பு வேண்டுகோள்
குவைத்: கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து போராடும் மக்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று குவைத் தமிழர் கூட்டமைப்பு தமிழக முதல்வர் ஜெயலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் பேராடும் மக்களுக்கு ஆதரவாக செயல்பட தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் தமிழக அரசியல் கட்சிகளுக்கு குவைத் தமிழர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தாயைப் பிரிந்த சேயின் மனநிலையோடு உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தாய்நாட்டின் மீதான பரிவும், ஏக்கமும் நிறைந்த மனத்துடனே அயல்நாட்டில் வாழும் தமிழர்கள் இருந்து வருகிறோம். தமிழ்நாட்டில் ஏற்படும் பிரச்சனைகள், அரசியல் மாற்றங்கள், தொழில், உற்பத்தி நிலை என சமூக அரசியல் பொருளாதார நிலைகளை உன்னிப்புடன் கவனித்து வருவதோடு எங்களால் இயன்ற பங்களிப்பையும் நல்கி வருகின்றோம்.
அண்மைக் காலங்களில் தமிழினப் பிரச்சனைகளில் பொதுமக்களே தன்னெழுச்சியாக போராடுவதோடு, தொழில் துறையினர், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பிறரும் இவ்வகைப் போராட்டங்களில் கலந்து கொள்வதும் எமக்கு நம்பிக்கையைத் தருவதாக அமைந்துள்ளது. அரசின் முடிவுகளை ஊடகங்களும், பொதுமக்களும், ஏனைய அரசியல் அமைப்புகளும் பிரச்சனையின் அடிப்படையிலேயே அணுகப்பட்டமை புதிய மாற்றத்தை தெளிவுபடுத்தியுள்ளது.
முத்தாய்ப்பாக ஐ.நா.சபையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் தமிழக உறுப்பினர்கள் அனைவரும் ஒரே குரலில் ஒலித்தமை தமிழினத்தின் புத்துணர்ச்சி என்றே கருதினோம். இதே நிலை தமிழினம் சார்ந்த அனைத்து முடிவுகளிலும் எதிரொலிக்க வேண்டுமென்பதே உலகத் தமிழர்களின் விருப்பமாகும்.
ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக, கூடங்குளத்தின் இன்றைய நிலை எம்மை பதைபதைக்க வைத்துள்ளது. உலகத் தமிழர்களுக்கு தாயாகவிருந்து அரவணைத்துச் செல்ல வேண்டிய தமிழகத்தில் இன்று ஒரு பகுதியினர் கைதிகளாக, வாழ்வியல் உரிமை மறுக்கப்பட்டவர்களாக, தண்ணீர், மின்சாரம், உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மறுக்கப்பட்டு, தடுக்கப்பட்டு மிகக் கொடியதொரு நிலையில் உள்ளனர் என்ற செய்தி எம்மை நிலைகுலையச் செய்துள்ளது.
அரசாங்கம் என்பது மக்களுக்கானதே. இதை இந்தியாவை, தமிழகத்தை ஆள்வோர் நன்குணர்ந்து, மக்களின் உணர்விற்கும் தேவைக்கும் மதிப்பளித்து நடந்துகொள்ள வேண்டும். இதைத் தான் தமிழக மக்களும், உலகெங்கும் வாழும் தமிழர்களும் விரும்புகின்றோம். இந்த நிலையில் ஏற்படும் மாற்றங்களை அரசிற்கு உணர்த்தவும், மக்களின் உணர்வுகளையும் தேவைகளையும் உணர்ந்து அவர்களோடு இணைந்து அரசினை வற்புறுத்த வேண்டிய கடமை அனைத்து அரசியல் இயக்கங்களுக்கும் உள்ளது.
அந்த வகையில் தமிழக அரசியல் இயக்கங்கள் அனைத்தும் ஒன்றுகூடி 6 மாதங்களுக்கும் மேலாக கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை நிறுத்தக் கோரி நடைபெறும் மக்கள் போராட்டத்தில் உடனடியாக கலந்து கொண்டு, அவர்கள் அனைத்து அடிப்படைத் தேவைகளையும் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். காவல் துறையால் ஏற்படுத்தப்படும் பதட்டத்தை தணித்து, மக்கள் அச்சமின்றி வாழ வழிகாண வேண்டும்.
தமிழகம் முழுமைக்கும் இம் மக்களுக்கு ஆதரவான நிலையினை உருவாக்கி நடுவண் அரசிற்கும், தமிழக அரசிற்கும் அழுத்தம் தந்து சரியான நிலைப்பாட்டினை எடுக்க வலியுறுத்த வேண்டும். காந்திய தேசம் அகிம்சை வழி என்று மேடையில் முழுங்கிவிட்டு அரசிற்கெதிராக போராடுவோரை ஆயுதம் கொண்டு தடுக்கும் நிலையினை மாற்ற வேண்டும். போராட்டங்களும் அதன் முறைகளும் தேர்ந்தெடுக்கப்படுபவை அல்ல, திணிக்கப்படுபவை. அமைதியான முறையில் போராடுவோரை இரும்புக்கரம் கொண்டு அடக்க நினைப்பது தவறான செயலாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.