திருச்செந்தூர் கோவில் உண்டியல் வசூல் ரூ.1 கோடியை தாண்டியது
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் வசூல் ரூ.1 கோடியை தாண்டியுள்ளது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2வது படைவீடாக கருதப்படுவது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். அங்கு தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதனால் கோவிலின் வருமானம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்நிலையில் மார்ச் மாத உண்டியல் வசூல் கடந்த 15 மற்றும் 28 ஆகிய தேதிகளில் எண்ணப்பட்டது.
கடந்த 15ம் தேதி திறந்த எண்ணப்பட்ட உண்டியலில் ரூ.53 லட்சத்து 61 ஆயிரத்து 507 ரொக்கம், தங்கம் 586 கிராம், வெள்ளி 14 கிலோ 260 கிராம் கிடைத்தது. நேற்று முன்தினம் இரண்டாவது முறையாக உண்டியலைத் திறந்து எண்ணும்போது ரூ.47 லட்சத்து 1, 592ம், கோசாலை உண்டியலில் ரூ.13, 280ம், அன்னதான உண்டியலி்ல் ரூ.4 லட்சத்து 52 ஆயிரத்து 123ம், கோசாலை அன்னதான உண்டியலில் ரூ.3,992ம், கிருஷ்ணாபுரம் அன்னதான உண்டியலில் ரூ.1,668ம் ஆக மொத்தம் ரூ. 1 கோடியே 5 லட்சத்து 34 ஆயிரத்து 162 வசூலாகியுள்ளது.
மேலும் 928 கிராம் தங்கமும், 16,950 கிராம் வெள்ளியும் வசூலாகியிருந்தது. உண்டியல் எண்ணும் நிகழ்ச்சியை கோவில் இணை ஆணையர் சுதர்சன், உதவி ஆணையர் செல்லத்துரை, தூத்துக்குடி உதவி ஆணையர் வீரராஜன், அலுவலக கண்காணிப்பாளர் செல்வகுமாரி, கண்காணிப்பாளர்கள் ராமசாமி, சுப்பையா, உள்துறை கண்காணிப்பாளர் வெங்கேடசன் மற்றும் முக்கிய பிரமுகர்கள பார்வையிட்டனர்.