2 மீனவர்கள் கொல்லப்பட்ட வழக்கு: நிபந்தனையுடன் இத்தாலிய கப்பலை விடுவித்த கேரள ஹைகோர்ட்
திருவனந்தபுரம்: எந்த நேரத்தில் விசாரணைக்கு அழைத்தாலும் கேப்டனும், ஊழியர்களும் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இத்தாலிய கப்பலை கேரள உயர் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது.
கடந்த மாதம் கொல்லம் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை நோக்கி அந்த வழியாக வந்த இத்தாலிய நாட்டு கப்பலில் இருந்த பாதுகாவலர்கள் சுட்டனர். இதில் தமிழக மீனவர் உள்பட 2 மீனவர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக இத்தாலி கடற்படை வீரர்கள் மாசிமிலியானோ, ஜிரோன் ஆகியோர் கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இத்தாலிய கப்பலான என்ரிகா லெக்ஸியும் கடந்த 17ம் தேதி முதல் கொச்சி துறைமுகத்தில்பிடித்து வைக்கப்பட்டுள்ளது. மீனவர்களை சுட பயன்படுத்திய துப்பாக்கிகளை கேரள போலீசார் கைப்பற்றி தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் கேரள உயர் நீதிமன்றத்தில் 2 வாரங்களுக்கு முன் கப்பல் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு நஷ்ட ஈடாக ரூ.3.10 கோடிக்கு வங்கி உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதால் கப்பலை விடுவிக்க வேண்டும் என கோரியுள்ளது. இதை விசாரித்த நீதிமன்றம் இதற்கு பதில் அளிக்கும்படி கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிது. அதன்படி கேரள அரசு நேற்று முன்தினம் தாக்கல் செய்த மனுவில் கப்பலை விடுவிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு எந்த நேரத்தில் அழைத்தாலும் கப்பல் கேப்டனும், ஊழியர்களும் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் கப்பலை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.