அரசியல் பிரமுகர்களால் தாக்கப்பட்ட ஓட்டப்பிடாரம் தாசில்தார் இடமாற்றம்
தூத்துக்குடி: அரசியல் பிரமுகர்களால் தாக்கப்பட்ட ஓட்டப்பிடாரம் தாசில்தார் இடமாற்றம் செய்யப்பட்டார். இதே போன்று மேலும் 8 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஓட்டப்பிடாரம் தாசில்தாராக இருந்தவர் சுப்பையன். அவருக்கும் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும் மணல் வண்டிகளை பிடித்தது மற்றும் தலையாரி நியமனம் குறித்து மோதல் ஏற்பட்டது. கடந்த ஒரு வாரத்துக்கு முன் தாலுகா ஆபிசில் வைத்து தாசில்தார் சுப்பையன் தாக்கப்பட்டார். இது தொடர்பாக தாசில்தார் உள்பட 51 பேர் மீது ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இது குறித்து மணியாச்சி டிஎஸ்பி ராஜேந்திரன் விசாரணை நடத்தி வந்தார்.
தாசில்தார் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட அரசியல் பிரமுகர்களை கைது செய்யக் கோரியும் தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய்த் துறையினர் வேலைநிறுத்தம் செய்தனர். நெல்லை மாவட்டத்திலும் வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் பிரச்சனையில் சிக்கிய ஓட்டப்பிடாரம் தாசில்தார் சுப்பையன் தூத்துக்குடி பறக்கும் படைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதே போன்று மேலும் 8 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விளாத்திகுளம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராமசுப்பிரமணியன் ஓட்டப்பிடாரத்திற்கும், ஓட்டப்பிடாரம் சமூக திட்ட தாசில்தாராக இருந்த மகேஸ்வரன் தூத்துக்குடி கேபிள் டிவி துணை மேலாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் தேர்தல் உதவியாளராக இருந்த 3 பேர் துணை தாசில்தாராகவும், துணை தாசில்தார்கள் 4 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதை கலெக்டர் ஆசிஷ் குமார் தெரிவித்தார்.