சிறுமலையில் பஸ் கவிழ்ந்து 61 பேர் படுகாயம்: மின்வெட்டால் பெரும் விபத்து தவிர்ப்பு
திண்டுக்கல்: சிறுமலையில் தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 61 பேர் படுகாயம் அடைந்தனர். மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலை கடல் மட்டத்தில் இருந்து 4,300 அடி உயரத்தில் உள்ளது. சிறுமலையில் இருந்து எஸ்.வி.ஆர். என்ற தனியார் பேருந்து திண்டுக்கல்லுக்கு புறப்பட்டது.
அந்த பேருந்தை ஆறுமுகம்(38) என்பவர் ஓட்டினார். முதல் கொண்டை ஊசி வளைவில் சென்றபோது பிரேக் பிடிக்காமல் போனதால் பேருந்து நிலை தடுமாறி மூன்று மின் கம்பங்களில் மோதி ரோட்டில் கவிழ்ந்தது. அந்த நேரம் மின்சாரம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 61 பேர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்களில் 3 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 40 எலுமிச்சை மூடைகளை பேருந்தின் கூரை மற்றும் உள்ளே வைத்துள்ளனர். அதனால் அதிக சுமை மற்றும் பிரேக் பிடிக்காததால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாக பயணிகள் தெரிவித்தனர்.
மின்வெட்டு பற்றி அனைவரும் எரி்ச்சலடைந்து கொண்டிருக்கையில் அதே மின்வெட்டால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது என்பது ஆறுதலாக உள்ளது.