நாங்கள் சந்தித்த தமிழ்க் கட்சிகள் எதுவும் தனி ஈழம் கேட்கவில்லை, சொல்கிறார் டி.கே.ரங்கராஜன்
டி.கே.ரங்கராஜன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து தனது இலங்கை சுற்றுப்பயணம் குறித்து விளக்கினார். அப்போது அவர் பேசியபோது, இலங்கையில் நிலைமை சகஜமாகி விட்டதாகவும்,மக்கள் சகஜநிலைக்குப் போய் விட்டதாகவும், யாரும் தனி ஈழம் கேட்கவில்லை என்றும் ஏதோ, இலங்கையில் ஒரு பிரச்சினையும் இல்லை என்பதைப் போல பேசினார்.
அவரது பேச்சு:
ஒரு இடத்திலும் கட்டுப்பாடு இல்லை
இலங்கையில் தமிழர்களை சந்தித்தபோது, எந்த எந்த இடங்களை எல்லாம் பார்க்கவேண்டும் என்று சொன்னோமோ அந்த இடங்களை எல்லாம் உடனடியாக காட்டுவதற்கு தயக்கம் காட்டவில்லை. எங்களுக்கு இலங்கை அரசு எந்த இடத்திலும் தடையோ கட்டுப்பாடோ, எந்த விதமான பாதுகாப்பு வளையமோ விதிக்கவில்லை. இலங்கையில் எல்லா இடங்களிலும் தமிழ் அதிகாரிகள் இருக்கிறார்கள் என்பது மிகவும் முக்கியமான விஷயமாகும்.
மாணிக்க தோட்டத்தில்தான் பாதிக்கப்பட்ட மக்கள் முள்வேலிக்குள் இருக்கிறார்கள். மாணிக்க தோட்டத்தில் ஒரு பெண் எங்களிடம், எனது மகனையும், மகளையும் காணவில்லை என்று கூறினார். அங்கிருந்து ராணுவ அதிகாரி ஒருவரை அழைத்தோம். அவரிடம் அந்த பெண் கூறியது பற்றி கேட்டோம். அவர் உடனடியாக கண்டுபிடிப்பதற்கு தகுந்த ஏற்பாடு செய்வதாக கூறினார். அரசு கொடுக்கும் அரிசி, பருப்பு தரம் உள்ளதாக இல்லை என்று அந்த பகுதி மக்கள் சொன்னார்கள்.
மட்டக்களப்பில் கண்ணீர் விட்டேன்
ராணுவத்தினர் எல்லா இடங்களிலும் இருப்பதை எங்களால் பார்க்கமுடிந்தது. தோட்டபகுதியை பார்த்தோம். அங்கு 17 லட்சம் தமிழர்கள் உள்ளனர். இவர்கள் உயர் கல்விக்கு பணம் வேண்டும் என்று கேட்டனர். உயர் கல்விக்கு இந்திய அரசு உதவி செய்யும் என்று சுஷ்மா சுவராஜ் அந்த இடத்திலே உறுதி அளித்தார்.
மட்டகளப்பு பகுதிக்கு சென்றபோது எங்களுக்கு வேதனையான நிலை ஏற்பட்டது. உண்மையிலே நான் கண்ணீர்விட்டேன். என்னுடன் வந்தவர்களும் கண்ணீர் வடித்தனர்.
35,000 விதவைப் பெண்கள்
இலங்கை போரில் 35 ஆயிரம் பெண்கள் விதவையாகி உள்ளதை பார்த்தோம். இவர்களில் 13 ஆயிரம் விதவைகள் 23 வயதுக்கு குறைவானவர்கள். 21-ந் தேதி காலை இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்தோம். அப்போது அவரிடம் காணாமல் போனவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்கள் பற்றிய விவரம் தேவை என்றும், மும்மொழி கொள்கையை அமல்படுத்தவேண்டும் என்றும், தமிழர்களுக்கு சமஉரிமை, கோவில்களில் உள்ள ராணுவத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் கூறினோம்.
தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் தாக்கக்கூடாது என்ற கோரிக்கையையும் ராஜபக்சேவிடம் எடுத்துக்கூறினோம். வடக்கு மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது என்றும், இது முடிந்ததும் அங்கு தேர்தல் நடத்தப்படும் என்றும், ராணுவத்தை வாபஸ் பெறுவதாகவும் ராஜபக்சே கூறினார்.
மத்திய அரசு ஒதுக்கிய பணத்தில் 1000 வீடுகள் கட்டவேண்டியதில் 650 வீடுகள்தான் கட்டி முடிக்கப்பட்டுள்ளது குறையாக உள்ளது. இலங்கை தமிழர்களின் நிலை குறித்து இந்த வாரம் பிரதமரை சந்தித்து எடுத்துச்சொல்ல உள்ளோம். கூடங்களம் அணுமின் நிலையத்திற்கு இலங்கையில் எந்த எதிர்ப்பும் இல்லை என்பது அங்குள்ளவர்களின் நிலையாகும்.
இந்த குழுவில் தி.மு.க-அ.தி.மு.க.வினர் மற்றும் தொல்.திருமாவளவன் இடம் பெற்று இருந்தால், குழுவின் பிரதிநிதித்துவம் மேலும் நன்றாக இருந்து இருக்கும். பொதுவாக நாங்கள் சந்தித்த இடங்களில் மக்கள் சகஜவாழ்க்கையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்கள் என்பது எங்கள் கருத்து.
தனி ஈழம் யாரும் கேட்கவில்லையே!
நாங்கள் சந்தித்த தமிழ் கட்சிகள், தமிழ் குழுக்கள் ஒன்றுபட்ட இலங்கையில் தங்களுக்கு அதிகாரம் வேண்டும் என்றுதான் சொன்னார்கள். தனி ஈழம் வேண்டும் என்று அங்கு உள்ள எந்த தமிழ் கட்சியும் வலியுறுத்தவில்லை. தனி தமிழ் ஈழம் வேண்டும் என்றோ, தமிழ் மக்கள் பிரிந்து செல்லவேண்டும் என்ற பிரச்சினையையோ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் எடுக்காது.
இலங்கையில் உள்ள மீனவர்கள் எங்களை சந்தித்து மனு கொடுத்தனர். தமிழக மீனவர்களுடன் மீண்டும் ஒரு முறை பேசி முடிவு செய்தால் நல்லது என்று அவர்களிடம் கூறினோம்.
இலங்கை அரசும் நல்லது செய்யவில்லை, காங்.கும் செய்யவில்லை
எம்.பி.க்கள் குழு இலங்கை சென்றதின் மூலம், இலங்கை அரசு நல்லது செய்துள்ளது என்றோ, காங்கிரஸ் அரசு நல்லது செய்துள்ளது என்றோ நிச்சயமாக சொல்ல முடியாது. இலங்கை தமிழ் மக்களுக்கு வாழ்க்கை, கல்வி, குடியிருப்பு ஆகியவற்றில் ஏராளமான குறைகள் உள்ளது. இந்த குறைகள் தீர்க்கப்படவேண்டும் என்பதுதான் எம்.பி.க்கள் குழுவின் நோக்கம் ஆகும் என்றார் அவர்.