குற்றச்சாட்டை ரத்து செய்ய கோரும் கனிமொழி, சரத்குமார் மனுக்கள்: செப் 5-ல் விசாரணை
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தங்களுக்கு எதிராக சிபிஐ பதிவு செய்துள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி திமுக எம்.பி கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநர் சரத் குமார் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுக்கள் வரும் செப்டம்பர் மாதம் 5, 6ம் தேதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இது குறித்து கனிமொழி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தவறான புரிந்து கொள்ளல் காரணமாகவும், ஆராயப்படாத ஆவணங்களின் அடிப்படையிலும் எனக்கு எதிராக குற்றச்சாட்டை பதிவு செய்ய டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றம் 2011 அக்டோபர் 23ம் தேதி சிபிஐக்கு அனுமதி அளித்தது தவறு.
கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் 2008 டிசம்பர் முதல் 2009 ஆகஸ்ட் மாதம் வரையிலான காலத்தில், அந்தத் தொலைக்காட்சியில் 20 சதவீத பங்குகளை மட்டும் நான் வைத்திருந்தேன். முக்கிய முடிவுகளை எடுக்கும் இயக்குநர்கள் குழு கூட்டத்தில்கூட கலந்து கொண்டதில்லை.
எந்த உடன்பாட்டிலும் நிதிப் பரிவர்த்தனையிலும் கையெழுத்திட்டதில்லை. ஆனால், பொருந்தாத சட்டப்பிரிவுகளின்படி சிபிஐ பதிவு செய்த வழக்கில் எனக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று கனிமொழி கூறியிருந்தார்.
இதேபோல், சரத் குமாரும் சிபிஐ நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்று தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுக்கள் நேற்று நீதிபதி எம்.எல். மேத்தா முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள விஜய் அகர்வாலின் வழக்கறிஞர் பேசுகையில்,
2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஷாஹித் பல்வா, ஆசிஃப் பல்வா, ராஜீவ் அகர்வால், சஞ்சய் சந்திரா, வினோத் கோயங்கா, கரீம் மொரானி உள்ளிட்டோர் ஏற்கெனவே இதே கோரிக்கையுடன் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளதால் அவற்றையும் பரிசீலிக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து நீதிபதி மேத்தா கூறுகையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் பொதுவான கோரிக்கையுடன் மனு தாக்கல் செய்துள்ளனர். அதனால், கனிமொழி, சரத் குமாரின் மனுக்களை செப்டம்பர் 5,6 ஆகிய தேதிகளிலும் மற்றவர்களின் மனுக்களை அதற்கு முன்னதாக ஆகஸ்ட் 6ம் தேதியிலும் விசாரிக்கப்படும் என்று அறிவித்தார்.
குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரியுள்ள கனிமொழி, சரத் குமார் உள்பட அனைவரது மனுக்களுக்கான பதில் மனுவை சிபிஐ ஏற்கெனவே தாக்கல் செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.