தமிழகத்தில் அமையும் டெய்ம்லர், யமஹா, அசோக் லேலண்ட்- நிஸ்ஸான், ராயல் என்ஃபீல்ட் தொழிற்சாலைகள்!

இதன்மூலம் இந்த நிறுவனங்கள் தமிழகத்தில் ரூ. 5,700 கோடி முதலீட்டில் தங்களது தொழிற்சாலைகளை அமைக்கவுள்ளன. இதன்மூலம் புதிதாக 9,530 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகவுள்ளன. மேலும் பல்லாயிரணக்கனக்கான மறைமுக வேலைவாய்ப்புகளும் உருவாகவுள்ளன.
இதுகுறித்து சட்டசபையில் 110வது விதியின்கீழ் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக, இன்று என் முன்னிலையில் 5 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன என்ற செய்தியை உறுப்பினர்களுக்கு தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
1. ஒரகடத்தில் டெய்ம்லர் இந்தியா கமர்ஷியல் வெஹிகிள் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தொழிற்சாலையை 18.4.2012 அன்று நான் திறந்து வைத்ததை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.
2008ம் ஆண்டு கடந்த ஆட்சியின்போது டெய்ம்லர் நிறுவனம் 3,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்பந்தம் கையெழுத்திட்டது. ஆனால், அந்நிறுவனம் 2010ம் ஆண்டில் தனது முதலீட்டினை 2,000 கோடி ரூபாயாக குறைத்துக் கொண்டது. எனது தலைமையிலான அரசால் எடுக்கப்பட்ட பல முன்னோடி நடவடிக்கைகளின் காரணமாக டெய்ம்லர் நிறுவனம் 2,000 கோடி ரூபாயாக குறைத்த தனது முதலீட்டினை இருமடங்காக்கி 4,000 கோடி ரூபாயாக முதலீடு செய்ய தற்போது முன் வந்துள்ளது. அதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்திடப்பட்டது. இதன் மூலம் 3,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு உருவாகும்.
2. ஜப்பான் நாட்டின் உலகப் புகழ்பெற்ற யமஹா நிறுவனம் மோட்டார் சைக்கிள்கள், மின்னணு பொருட்கள், இசைக் கருவிகள், படகுகளுக்கான மோட்டார் என்ஜின்கள் போன்றவற்றைத் தயாரிக்கும் நிறுவனமாகும்.
தற்போது, இந்தியா யமஹா மோட்டார் லிமிடெட் நிறுவனம் , காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் வடகால் சிப்காட் தொழிற் பூங்காவில் 1,500 கோடி ரூபாய் முதலீட்டில் 125 ஏக்கர் பரப்பளவில் அதிநவீன மோட்டார் சைக்கிள்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றினை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று காலை கையெழுத்தானது. இதன் மூலம் 3,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும் 20,000 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
3. அசோக் லேலண்ட்- நிஸ்ஸான் மோட்டார் கம்பெனி லிமிடெட் நிறுவனத்துடன் முந்தைய அரசு 8.9.2008 அன்று லகுரக வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்காக, 4,150 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட்டது. ஆனால், இந்நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தின்படி வழங்க வேண்டிய நிலம், 21.2.2011 அன்று, அதாவது சுமார் இரண்டரை ஆண்டுகள் கழித்து தான் முந்தைய அரசால் வழங்கப்பட்டது.
மேலும், அந்நிறுவனத்தின் சில நிர்வாகக் கோரிக்கைகள் முறையாக பரிசீலித்து முடிவெடுக்கப்படாததால், இந்தத் திட்டம் தொடங்கப்படாமலேயே இருந்தது. முடங்கிக் கிடந்த இத்திட்டத்திற்கு எனது அரசு மீண்டும் புத்துயிரூட்டி புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று இன்று கையெழுத்திடப்பட்டது.
ஓசூர், பிள்ளைப்பாக்கம், எண்ணூர், வெள்ளிவாயல்சாவடி மற்றும் ஒரகடம் ஆகிய பகுதிகளில் அமையவுள்ள இத்திட்டத்தின் மூலம் 3,000 பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும்.
4. புகழ்பெற்ற ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிள்களைத் தயாரிக்கும் எய்ஷர் மோட்டார் நிறுவனம் புதிய தொழிற்சாலை ஒன்றினை ஒரகடத்தில் நிறுவ முன்வந்துள்ளது. இதற்காக, ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் 50 ஏக்கர் நிலத்தை எனது அரசு வழங்கியுள்ளது. அங்கு 350 கோடி ரூபாய் முதலீடு செய்ய இன்று அந்நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் 300 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
5. இதேபோன்று, ஆர்.பி. கோயங்கா குழுமத்தின் நிறுவனமான ஃபிலிப்ஸ் கார்பன் பிளாக் லிமிடெட் நிறுவனம் டயர் தயாரிப்பதற்குத் தேவையான கார்பன் பிளாக் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றினை 350 கோடி ரூபாய் முதலீட்டில் திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்க்கண்டிகை சிப்காட் தொழிற் பூங்காவில் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று கையொப்பமிட்டது. இத்தொழிற்சாலையில் 230 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
இன்று கையெழுத்தான இந்த 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மூலம் தமிழகத்திற்கு புதியதாக வரக்கூடிய முதலீடு குறைந்தபட்சம் 5,700 கோடி ரூபாய் ஆகும். புதிதாக உருவாகும் வேலைவாய்ப்புகள் 9,530 ஆகும்.
இன்னும், பல தொழில் முதலீட்டு முன்மொழிவுகள் அரசின் பரிசீலனையில் உள்ளன என்பதையும், அவற்றுக்கான ஒப்புதல் விரைவில் வழங்கப்பட்டு, அதற்கான ஒப்பந்தங்களும் விரைவில் கையொப்பமிடப்பட உள்ளன என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications