மருத்துவ படிப்பு: முதல் நாளிலேயே 11,000 விண்ணப்பங்கள் விற்பனை
சென்னை: மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகின்றன. முதல் நாளான நேற்று மட்டும் 11,000 பேர் விண்ணப்பங்கள் வாங்கிச் சென்றுள்ளனர்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் நேற்று துவங்கியது. தமிழகத்தில் உள்ள சென்னை மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி உள்பட 17 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியிலும் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இதற்காக 25,000 விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளது. அதில் விண்ணப்ப வினியோகம் துவங்கிய முதல் நாளான நேற்று மட்டும் 11,000 விண்ணப்பங்கள் விற்றுத் தீர்ந்தன.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பம் வாங்க பெற்றோர்களும், மாணவர்களும் நேற்று காலை 6 மணிக்கே வந்துவிட்டனர். அதனால் விண்ணப்பம் வழங்கும் நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்றனர்.
மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பின் மீதுள்ள ஆர்வம் அதிகரித்துள்ளதே இது காட்டுகிறது.
17 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 1 அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 1,653 எம்.பி.பி.எஸ். இடங்களும், 85 பி.டி.எஸ். இடங்களும் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். மொத்தமுள்ள இடங்களில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டின்படி நிரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications