உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வையடுத்து பெட்ரோல் விலையை குறைந்தபட்சம் ரூ. 4 வரை உயர்த்துமாறு எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்த நிலையில், விலையை ஒரேயடியாக ரூ. 7.54 உயர்த்தியுள்ளது அரசு. இது எண்ணெய் நிறுவனங்களே எதிர்பார்க்காத அளவுக்கான விலை உயர்வு என்று கருதப்படுகிறது.
இந்த விலை உயர்வுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. சென்னை உள்பட பல்வேறு நகர்களிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந் நிலையில், விலையை கொஞ்சம் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இதுவும் கூட திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகமாகவே தெரிகிறது. முதலில் சர்வதேச காரணங்களைச் சொல்லி விலையை உயர்த்துவது, அப்புறம் மக்களின் கோரிக்கையை ஏற்று விலையைக் குறைப்பது என்ற டிராமா நடத்தப்படவுள்ளதாகத் தெரிகிறது.
வெள்ளிக்கிழமை நடக்கவுள்ள நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான எரிபொருள் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு விலை குறைப்புத் தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யலாம் என்று தெரிகிறது. இதை ஏற்று மத்திய அரசு விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில் இந்தக் கூட்டத்தில் டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், சமையல் கேஸ் விலையை சிலிண்டருக்கு ரூ. 50ம் உயர்த்துமாறு இந்தக் குழு பரிந்துரைக்கலாம் என்றும் தெரிகிறது.