இந்தியா- மியான்மர் இடையேயான சாலைப் போக்குவரத்து திறக்கப்படுகிறது
டெல்லி: இந்தியாவுக்கும் மியான்மருக்கும் இடையே பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. இம்மாத இறுதியில் மியான்மர் செல்லும் பிரதமர் மன்மோகன்சிங் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், நாகலாந்து, மிசோராம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த இந்திய வம்சாவழியினர் அருகில் உள்ள மியான்மரிலும் வசித்து வருகின்றனர். இருநாடுகளிடையே 1640 கிமீ தூரத்துக்கு எல்லைப் பகுதி உள்ளது.
தற்போது மணிப்பூரின் மோரே நகரில் இந்தியா -மியான்மார் இடையேயான தடையற்ற வர்த்தக மையம் அமைந்திருக்கிறது. இருநாட்டு வர்த்தகர்களும் மோரேவில் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு டோக்கனைப் பெற்றுக் கொண்டு பொருட்களை வாங்க விற்பனை செய்ய சுதந்திரமாக நடமாட முடியும். இதேபோல் மோரேவுக்கு அருகில் உள்ள டம்மு நகருக்கும் காலை முதல் மாலை வரை சுதந்திரமாக சென்று திரும்பவும் முடியும். மோரேயில் தமிழர்கள் கணிசமாக வசித்தும் வருகின்றனர்.
இந்நிலையில் இம்மாத இறுதியில் மன்மோகன்சிங் மியான்மர் செல்ல உள்ளார். அப்போது மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து மியான்மர் நாட்டின் மாண்ட்லா நகர் வரையிலான சாலை போக்குவரத்து திறக்கப்பட உள்ளது. இந்த சாலைப் போக்குவரத்தானது பல ஆசிய நாடுகளை தரைவழியாக இணைக்கக் கூடிய ஒன்று ஆசிய நெடுஞ்சாலை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த போக்குவரத்து மூலம் வாகனங்கள் இந்தியாவின் மோரே மற்றும் மியான்மரின் டம்மு ஆகிய இடங்களில் நின்று செல்லும். மியானம்ர் நாட்டுக்கும் இந்தியாவுக்குமான சாலை விதிகள் வேறாக இருப்பதால் இருநாட்டுக்கும் பொதுவாக சாலை விதிகளில் மாற்றம் கொண்டுவரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.