திருப்பதி கோவிலில் லட்டு விற்பனையில் மோசடி-14 ஊழியர்கள் கைது
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு விற்பனையில் மோசடியில் ஈடுபட்ட 14 பணியாளர்களை திருப்பதி போலீசார் கைது செய்தனர்.
திருப்பதி ஏழைமலையான் கோவிலில் விற்கப்படும் லட்டுகள், உலக புகழ் பெற்றவை. ஒரு லட்டு ரூ.10 வீதம் ஒரு பக்தருக்கு 2 லட்டுகள் மட்டுமே வழங்கப்படுகிறது. இதற்காக பக்தர்களுக்கு லட்டு டோக்கன்கள் வழங்கப்படுகிறது. லட்டு விற்பனையை அவ்வப்போது தேவஸ்தான அதிகாரிகள் கண்காணிப்பது வழக்கம்.
ஆந்திர வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டு லட்டு விற்பனை பணியை, நேற்று தேவஸ்தான கண்காணிப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது லட்டு டோக்கன்களின் அளவை விட, அதிக பணம் வசூலாகி இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து விற்பனையாளர்கள் டோக்கன் கொடுக்காமலேயே பக்தர்களுக்கு லட்டுகள் விற்றது தெரியவந்தது. இது தொடர்பான விசாரணையில் விற்பனையில் இருந்த 14 ஊழியர்கள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இது குறித்து தேவஸ்தான் அதிகாரிக்ள் திருப்பதி போலீசாரிடம் புகார் அளித்தனர். இப்புகாரின் பேரில் மோசடியில் ஈடுபட்ட 14 ஊழியர்களை திருப்பதி போலீசார் கைது செய்தனர்.