10ம் வகுப்பில் தோல்வியடைந்தவர்களுக்கு 25ம் தேதி உடனடித் தேர்வுகள் துவக்கம்
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கான உடனடித் தேர்வுகள் வரும் 25ம் தேதி துவங்கி ஜூலை மாதம் 2ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 4ம் தேதி துவங்கி 23ம் தேதி வரை நடந்தது. 11 லட்சத்து 68,000 மாணவ-மாணவியர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு வெளியாகின. இதில் 86.2 சதவீத மாணவ-மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் பத்தாம் வகு்பபு தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கான உடனடித் தேர்வுகள் வரும் 25ம் தேதி துவங்கி ஜூலை மாதம் 2ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் அந்தந்த பள்ளிகளில் பெற்லாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேர்வு கட்டணத்துடன் சேர்த்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் நாளை முதல் 7ம் தேதி வரை சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணமாக பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களில் அனைத்து பாடங்களுக்கும் சேர்த்து ரூ.125ம், மெட்ரிக் மாணவர்களுக்கு ரூ.132ம், கூடுதலாக ஒரு பாடத்திற்கு ரூ.50ம் செலுத்த வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.