இரவு பகலாக படித்தேன்... 10ம் வகுப்பில் 3வது இடம்பிடித்த சென்னை மாணவி
சென்னை: சென்னை டவுட்டன் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜாஷ்னவி 500க்கு 497 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 3-வது இடம் பிடித்துள்ளார். டாக்டராவதே தனது லட்சியம் என மாணவி விருப்பம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி எனப்படும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் மாநில அளவில் 499 மதிப்பெண் எடுத்து முதல் இடத்தினை இரண்டு பேர் பகிர்ந்து கொண்டனர். 498 மதிப்பெண் எடுத்து இரண்டாம் இடத்தினை 50 பேர் பிடித்தனர். 497 மதிப்பெண் பெற்று 224 பேர் மூன்றாம் இடத்தித்தை பிடித்தனர்.
சென்னை டவுட்டன் மகளிர் மேல்லைப்பள்ளி மாணவி ஜாஷ்னவி, மாநில அளவில் 497 பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.
அவர் பெற்ற மதிப்பெண்கள்:
தமிழ் - 98
ஆங்கிலம் - 99
கணிதம் - 100
அறிவியல் - 100
சமூக அறிவியல் - 100
மாணவி ஜாஷ்னவி கொடுங்கையூர் மகாகவிபாரதியார் நகரை சேர்ந்தவர். மாணவியின் தந்தை ஸ்ரீதர்குமார் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தாய் ரமாதேவி. சாதனை குறித்து மாணவி ஜாஷ்னவி கூறுகையில்,
பத்தம் வகுப்பு பொதுத் தேர்வில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்தேன். இதற்காக ஒரு வருடமாக இரவு, பகல் என பாராமல், தூக்கமில்லாமல் படித்தேன். படிக்க வேண்டும் என நினைத்தால் எந்த நேரத்திலும் எழுந்து படிப்பேன். இவ்வளவு கடினமாக முயற்றி மேற்கொண்டதனால் இந்த சாதனையை எட்ட முடிந்தது.
தனது வெற்றிக்கு காரணமாக இருந்த பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி. டாக்டர் ஆவதே என் லட்சியம். இதற்காக வரும் காலங்களில் இன்னும் கடுமையாக உழைப்பேன் என்று ஜஷனவி கூறினார்.