புதுக்கோட்டை இடைத்தேர்தலை ரத்து செய்ய தேமுதிக கோரிக்கை
புதுக்கோட்டை: புதுக்கோட்டை இடைத்தேர்தல் நேர்மையாக நடக்க வாய்ப்பில்லை என்பதால் இந்த இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு தேமுதிக கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் பாண்டியராஜன், பாபு முருகவேல், மாநில துணைச் செயலாளர் ஆஸ்டின் ஆகியோரை உள்ளடக்கிய தேர்தல் பணிக் குழுவினர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் புதுக்கோட்டையில் ஆளும் அதிமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேமுதிக வேட்பாளர் ஜாகீர் உசேனை ஆதரித்து எங்கள் கட்சி தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் பிரச்சாரம் செய்த போது போலீசார் மூலம் ஆளுங்கட்சியினர் நெருக்கடி கொடுத்தனர்.
புதுக்கோட்டை தொகுதியில் வாக்காளர்களுக்கு தலா ரூ.1,000 வீதம் அதிமுகவினர் பணப் பட்டுவாடா செய்து வருகின்றனர். வாராப்பூர் பகுதியில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணப் பட்டுவாடா செய்ததை கண்டுபிடித்து தடுத்த எங்களை கொலை செய்துவிடுவதாக அதிமுகவினர் மிரட்டுகின்றனர். இது குறித்து எஸ்.பி. சுதாகரிடம் புகார் தெரிவித்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதை எல்லாம் பார்க்கும்போது புதுக்கோட்டை இடைத்தேர்தல் நேர்மையாக நடக்காது என்று தெரிகிறது. எனவே, இந்த இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளோம். இது குறித்து மாவட்ட கலெக்டர் கலையரசி மற்றும் தேர்தல் பார்வையாளர்களிடம் புகார் அளித்துள்ளோம் என்றனர்.